'தமிழ்ப்புதல்வன்' திட்டம்: துவக்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின் அனைவரும் உயர்கல்வி கற்க அறிவுறுத்தல்
'தமிழ்ப்புதல்வன்' திட்டம்: துவக்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின் அனைவரும் உயர்கல்வி கற்க அறிவுறுத்தல்
ADDED : ஆக 10, 2024 01:50 AM

கோவை,:''தந்தையாக இருந்து, 'தமிழ்ப்புதல்வன்' திட்டத்தை துவக்கி வைக்கிறேன்,'' என, கோவையில் நேற்று நடந்த விழாவில், தமிழக முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சியாக பேசினார்.
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், 6ம் வகுப்பு முதல், 12ம் வகுப்பு வரை தமிழ்வழியில் படித்து, கல்லுாரியில் சேர்ந்து உயர்கல்வி கற்கும் மாணவர்களுக்கு, மாதந்தோறும், 1,000 ரூபாய் உதவித்தொகை வழங்கும், 'தமிழ்ப்புதல்வன்' திட்டம், கோவையில் நேற்று துவக்கி வைக்கப்பட்டது.
விழாவில், தமிழக அரசின் தலைமை செயலர் சிவ்தாஸ் மீனா வரவேற்றார்.
மனதுக்கு நெருக்கமானது
கல்லுாரி மாணவர்களுக்கு, 'டெபிட்' கார்டுகளை வழங்கி, திட்டத்தை துவக்கி வைத்த முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
தமிழக மக்களுக்கு ஏராளமான திட்டங்கள் செயல்படுத்துகிறோம். சில திட்டங்களே மனதுக்கு நெருக்கமாக இருக்கும். அவ்வகையில், தமிழ்ப்புதல்வன் திட்டம் துவக்கி வைக்கப்படுகிறது.
இத்திட்டம் வாயிலாக, 3.28 லட்சம் மாணவர்கள் பயனடைவர். இதற்காக, 360 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும்.
குடும்பத்தில் ஒருவன்
தந்தையாகவும், உங்கள் குடும்பத்தில் ஒருவனாகவும் இருந்து உருவாக்கிய திட்டம், இது.
இதன் வாயிலாக நீங்கள் பெறும் வளர்ச்சியை, அடுத்தடுத்த ஆண்டுகளில் கண்காணிப்பேன். வரும், 2030க்குள் தமிழகத்தை ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக உயர்த்த வேண்டும்.
இதன் வாயிலாக வளர்ச்சியடைந்த, வெளிநாடுகளுக்கு இணையான கட்டமைப்பு வசதிகள் கொண்ட மாநிலமாக தமிழகம் உயரும்.
அனைத்து குழந்தைகளும், உயர்கல்வி கற்க வேண்டும். பள்ளிப்படிப்பு முடிந்ததும் ஒரு மாணவர்கூட உயர்கல்வி கற்காமல் திசைமாறி செல்லக்கூடாது. கல்லுாரி மாணவர்கள் கல்வித்தகுதிக்கு ஏற்ப வேலைவாய்ப்பு பெற வேண்டும்.
வறுமை இல்லாத, சமத்துவம் வாய்ந்த அறிவு சார்ந்த தமிழ் சமுதாயத்தை வருங்காலத்தில் உருவாக்க வேண்டும். மாணவர்கள் கல்வி கற்க, எதுவும் தடையாக இருக்கக் கூடாது. தடங்கல் ஏற்பட்டால், உடைத்தெறிந்து வெற்றிபெற வேண்டும். அதற்கு உதவ நானிருக்கிறேன்.
உடைத்தெறியுங்கள்
ஒலிம்பிக்கில் பங்கேற்ற வினேஷ் போகத், தைரியம், தன்னம்பிக்கை, அசாத்திய துணிச்சலுள்ள பெண்ணாக போராடி, நாம் பாராட்டும் அளவுக்கு, கொடிகட்டிப் பறக்கிறார். தடைகள் என்பது உடைத்தெறியத்தான்; தடைகளைப் பார்த்து சோர்ந்து முடங்கக்கூடாது.
வெற்றி ஒன்றே இலக்காக இருக்க வேண்டும்; வெற்றி ஒருநாள் வசப்படும். உங்கள் மீது அதிக நம்பிக்கை வைத்திருக்கிறேன். உங்களுக்குப் பின், உங்களது பெற்றோர், உங்களது குடும்பம் மட்டுமல்ல; திராவிட மாடல் அரசும் இருக்கும்.
இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.
விழாவில், தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை செயலர் ஜெயஸ்ரீ நன்றி கூறினார். கோவை கலெக்டர் கிராந்திகுமார் நினைவுப்பரிசு வழங்கினார்.
அமைச்சர்கள் வேலு, பொன்முடி, முத்துசாமி, மகேஷ், கீதாஜீவன் முன்னிலை வகித்தனர். எம்.பி.,க்கள் ராஜ்குமார், ஈஸ்வரசாமி, எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.