ADDED : மார் 05, 2025 04:56 AM

சென்னை; வடக்கில் இருந்து வீசும் வறண்ட காற்றின் தாக்கத்தால், தமிழகத்தில் வெப்பநிலை இயல்பை விட, 3 டிகிரி செல்ஷியஸ் வரை அதிகரித்துள்ளது.
இதுகுறித்து, வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை: பூமத்திய ரேகையை ஒட்டிய, மேற்கு இந்திய பெருங்கடல் மற்றும் மாலத்தீவு பகுதிகளில், வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதேபோன்று, குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடாவை ஒட்டிய பகுதிகளிலும் மற்றொரு வளிமண்டல சுழற்சி காணப்படுகிறது.
அதேநேரத்தில், தமிழகத்தில் வறண்ட காற்று வீசுவதும் படிப்படியாக அதிகரித்துள்ளது. இதனால், தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வெப்பநிலை இயல்பில் இருந்து, 2 முதல் 3 டிகிரி செல்ஷியஸ் வரை அதிகரித்துள்ளது.
தமிழகத்தில், வரும் 9ம் தேதி வரை பொதுவாக வறண்ட வானிலை நிலவும், 8ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்ப நிலை இயல்பைவிட, 3 டிகிரி செல்ஷியஸ் கூடுதலாக பதிவாகக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டமாகக் காணப்படும். காலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.