கடித்த பாம்பை பிடித்து வந்த பெண்ணால் டாக்டர்கள் அதிர்ச்சி
கடித்த பாம்பை பிடித்து வந்த பெண்ணால் டாக்டர்கள் அதிர்ச்சி
ADDED : ஜூலை 01, 2024 03:08 AM

கோத்தகிரி: நீலகிரி மாவட்டம், கோத்தகிரி பரவக்காடு பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி மல்லிகா, 50. இவர் நேற்று தேயிலை தோட்டத்தில் பசுந்தேயிலை பறித்துக் கொண்டிருந்த போது பாம்பு கடித்துள்ளது. அருகில் இருந்தவர்கள் அவரை, கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கடித்த பாம்பை அடையாளம் காட்ட, திடீரென ஒரு பையை எடுத்த அவர், அதனுள் இருந்த பாம்பை டாக்டர்களிடம் காண்பித்துள்ளார்.
அதிர்ச்சியடைந்த அவர்கள், பையுடன் அதை வாங்கி, வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். மல்லிகாவுக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளித்தனர்.
வன ஊழியர்கள் பாம்பை மீட்டு அடர்ந்த வனப்பகுதிக்குள் விடுவித்தனர். வனத்துறையினர் கூறுகையில், 'விஷத்தன்மை கொண்ட அந்த பாம்பு, 'மலபார் பிட் வைப்பர்' வகையை சார்ந்தது. பாம்பு கடித்தவுடன் அவர் மருத்துவமனைக்கு வந்ததால் பிரச்னை இருக்காது' என்றனர்.
இதேபோல், புதுக்கோட்டை மாவட்டம், சங்கம்விடுதி கிராமத்தை சேர்ந்த விவசாயி மதியழகன் தன் மகளை கடித்த பாம்புடன் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.