உள்ளாட்சி அமைப்புகளின் மின்கட்டண பாக்கி ரூ.1,365 கோடி
உள்ளாட்சி அமைப்புகளின் மின்கட்டண பாக்கி ரூ.1,365 கோடி
UPDATED : மே 12, 2024 11:42 AM
ADDED : மே 12, 2024 03:42 AM

சென்னை: தமிழக மின் வாரிய ஊழியர்கள், வீடுகளில் மின் பயன்பாடு கணக்கு எடுத்ததில் இருந்து, 20 தினங்களுக்குள் கட்டணத்தை செலுத்த வேண்டும்.
இல்லையெனில், மின் வினியோகம் துண்டிக்கப்படும். பின், அபராதத்துடன் கட்டணம் செலுத்தியதும் மின்சாரம் வழங்கப்படும்.
உள்ளாட்சி அமைப்புகள் சேவை நோக்குடன் செயல்படுவதால், அவற்றுக்கு மட்டும் கட்டணம் செலுத்த, 60 நாட்கள் அவகாசம் அளிக்கப்படுகிறது. இருப்பினும், அவை சரிவர செலுத்தாமல் இருந்தன. உள்ளாட்சி அமைப்புகளின் மின் கட்டண நிலுவை, 2,000 கோடி ரூபாய்க்கு மேல் இருந்தது.
அதில், மாநகராட்சிகளின் பங்கு, 500 கோடி ரூபாய்க்கும் அதிகமாக இருந்தது.
ஏற்கனவே, மின் வாரியம் கடும் நிதி நெருக்கடியில் உள்ள நிலையில், உள்ளாட்சி அமைப்புகள் வைத்த நிலுவை கூடுதல் சிரமத்தை ஏற்படுத்தியது.
எனவே, மின் கட்டணத்தை விரைந்து செலுத்துமாறு, உள்ளாட்சி அமைப்புகளிடம் வலியுறுத்தப் பட்டது.
அதற்கு ஏற்ப அவையும், சில மாதங்களாக கட்டணத்தை சரிவர செலுத்தி வருகின்றன. கடந்த ஏப்ரல் நிலவரப்படி, சென்னை மாநக ராட்சி, 17.55 கோடி ரூபாய்; மற்ற மாநகராட்சிகள், 135 கோடி ரூபாய்; நகராட்சிகள், 125 கோடி ரூபாய்; பேரூராட்சிகள், 61 கோடி ரூபாய்; ஊராட்சிகள், 1,026 கோடி ரூபாய் என, 1,365 கோடி ரூபாய் நிலுவை வைத்துள்ளன.