ADDED : மே 11, 2024 08:12 PM

திருநெல்வேலி: காட்டுக்குள் உணவின்றி தவித்து உயிருக்கு போராடிய ஆதரவற்ற முதியவரை போர்வையால் சுற்றி 2.5 கிலோமீட்டர் தூக்கி சுமந்த போலீசார் நடவடிக்கையை கண்டு பொதுமக்கள் பாராட்டினர்.
நெல்லை மாவட்டம் பணகுடி அருகேயுள்ள ரோஸ்மியாபுரம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் முதியவர் ஒருவர் உயிருக்கு போராடுவதாக பணகுடி காவல் நிலைய தனிப்பிரிவு -க்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் பேரில் பணகுடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் மலை அடிவாரத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது முதியவர் கிடக்கும் இடத்திற்கு ஆம்புலன்ஸ் செல்வதற்கான வழிகள் இல்லை.
இதை புரிந்து கொண்ட போலீசார் முதியவரை போர்வையில் ஸ்ட்ரெச்சர் போல அமைத்து அதில் முதியவரை படுக்க வைத்து சுமார் இரண்டரை கிலோமீட்டர் தூரம் காட்டிற்குள் இருந்து மெயின் ரோடு வரை தூக்கி சுமந்து வந்தனர். பின்பு 108 ஆம்புலன்ஸில் ஏற்றி பணகுடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று மருத்துவ சிகிச்சை அளித்தனர். அவர் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.