சர்ச் சொத்துக்களை பதிவு சட்டத்தில் சேர்க்க நேரம் வந்து விட்டது : உயர்நீதிமன்றம்
சர்ச் சொத்துக்களை பதிவு சட்டத்தில் சேர்க்க நேரம் வந்து விட்டது : உயர்நீதிமன்றம்
ADDED : மே 29, 2024 04:20 AM
மதுரை ; ''ஹிந்து கோயில் சொத்துக்கள் அறநிலையத்துறை சட்டப்படியும், வக்போர்டு சொத்துக்கள் வக்பு வாரியம் சட்டப்படியும் பாதுகாக்கப்படுவது போல் கிறிஸ்தவ தேவாலய சொத்துக்களையும் பதிவுச்சட்டத்தில் சேர்க்க நேரம் வந்து விட்டது,'' என, உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தெரிவித்தார்.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்துார் ஷாலின் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு: நான் 2023 ல் விஜயா என்பவரிடமிருந்து சொத்து வாங்கினேன். அதை பதிவு செய்ய திருப்பத்துார் சார்பதிவாளர் மறுத்து விட்டார். இதுதொடர்பாக 2023 மார்ச் 29ல் சார்பதிவாளர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து, நான் வாங்கிய சொத்தை உடன் பத்திரப் பதிவு செய்ய உத்தரவிட வேண்டும். இவ்வாறு தெரிவித்திருந்தார்.
இம்மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன் விசாரணைக்கு வந்தது.
திருப்பத்துார் சார் பதிவாளர் பதில் மனு தாக்கல் செய்தார். அதில், 'சென்னை உயர் நீதிமன்றம் 2017-ல் இரு வழக்குகளில் தமிழ் இவாஞ்சலிக்கல் லுாத்தரன் சர்ச் (டி.இ.எல்.சி.,) சொத்துக்களை உயர்நீதிமன்ற அனுமதி இல்லாமல் பத்திரப்பதிவு செய்யக்கூடாது என உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக பதிவுத்துறை ஐ.ஜி., சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். இதன் அடிப்படையில் மனுதாரர் சொத்துப் பதிவு விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது,' என குறிப்பிடப்பட்டது.
பின் நீதிபதி பிறப்பித்த உத்தரவு: தமிழில் 'சிவன் சொத்து குலநாசம்' என்பார்கள். அதாவது 'கோயில் சொத்துக்களை அபகரித்தால் குடும்பம் அழிந்து விடும்' என்பது அதன் அர்த்தம். ஹிந்து, இஸ்லாமிய சட்டப்படியான சொத்துக்களை பதிவுத்துறைச் சட்டம் பாதுகாக்கிறது. அந்த பதிவுத்துறைச் சட்டத்தில் தேவாலய சொத்துக்கள் சேர்க்கப்படவில்லை.
ஹிந்து கோயில் சொத்துக்கள் ஹிந்த சமய அறநிலையத்துறை சட்டப்படியும், வக்போர்டு சொத்துக்கள் வக்பு வாரிய சட்டப்படியும் பாதுகாக்கப்படுகிறது. கிறிஸ்துவ ஆலய சொத்துக்களை பொறுத்தவரை இதுபோன்ற சட்டம் இல்லாதது ஆச்சரியமாக உள்ளது.
இந்தியா மதசார்பற்ற நாடு. அனைத்து மதங்களையும் சமமாக அணுக வேண்டும். இதனால் தேவாலய சொத்துக்களை பதிவுத்துறைச் சட்டம் 22-ஏ பிரிவின் கீழ் கொண்டுவர வேண்டும். அதற்கான நேரம் வந்துள்ளது. உயர்நீதிமன்றத்தில் டி.இ.எல்.சி., சொத்து தொடர்பான பிரதான வழக்கு, பதிவுத்துறை ஐ.ஜி.,யின் சுற்றறிக்கையை சுட்டிக்காட்டி திரும்ப பெறப்பட்டுள்ளது. பிரதான மனு நிலுவையில் இல்லாத போது இடைக்கால உத்தரவுக்கு உயிர் இல்லை.
பதிவுத்துறை ஐ.ஜி.,யின் சுற்றறிக்கை சட்டப்படியான உத்தரவும் இல்லை. உயர்நீதிமன்ற உத்தரவு குறித்து அனைத்து பதிவுத்துறை அலுவலர்களுக்கு தகவல் அனுப்பியுள்ளார். இதனால் டி.இ.எல்.சி., சொத்துக்களை பொறுத்தவரை தற்போது எந்த தடையும் இல்லை. மேலும் தேவாலய சொத்துக்கள் பதிவுத்துறை சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்படாத நிலையில் அந்த சொத்துக்களை பதிவு செய்ய மறுப்பது சரியல்ல. எனவே சார்பதிவாளரின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. மனுதாரர் பத்திரப்பதிவுக்கு மீண்டும் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.