'வார ராசி பலன் போல கொலை பட்டியல் வெளியிடும் அவலம்'
'வார ராசி பலன் போல கொலை பட்டியல் வெளியிடும் அவலம்'
ADDED : ஆக 05, 2024 01:22 AM
சென்னை:'வாரந்தோறும் ராசி பலன் வெளியிடுவது போல, கொலை பட்டியலை நாளிதழ்கள் பிரசுரிக்கும் அளவுக்கு தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்துள்ளது' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் காவிரி ஆற்றுப் பெருக்கை வேடிக்கை பார்த்த விராலிமலையைச் சேர்ந்த ரஞ்சின் கண்ணன் என்ற மாணவரை, போதை கும்பல் அடித்து கொலை செய்துள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.
இது, தி.மு.க., ஆட்சியில் சட்டம் - ஒழுங்கு எந்த அளவிற்கு சீர்கெட்டுள்ளது என்பதற்கு அத்தாட்சி.
கடந்த ஒரு வாரத்தில் மட்டும், சென்னை, கடலுார், நாகை, திருச்சி, கோவை என, தமிழகம் முழுதும் தொடர்ந்து கொலை செய்தி வருவது அதிர்ச்சியும், கவலையும் அளிக்கிறது.
வாரந்தோறும் ராசி பலன் போடுவது போல, கொலை பட்டியலை நாளிதழ்கள் பிரசுரிக்கும் அளவுக்கு, சட்டம் - ஒழுங்கை அடியோடு சீர்குலைத்துள்ள தி.மு.க., அரசுக்கு கண்டனம்.
தினமும் அரங்கேறும் கொலை சம்பவத்தால், எப்படி மக்கள் பாதுகாப்பாக உணர முடியும்; எப்படி அச்சமின்றி வேலைக்கு செல்ல முடியும்?
அ.தி.மு.க.,வின் திட்டங்களுக்கு, 'ஸ்டிக்கர்' ஒட்டுவதில் செலுத்தும் கவனத்தை, சட்டம் - ஒழுங்கை காக்கும் நடவடிக்கையில் இனியாவது முதல்வர் செலுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.