சமாதி கட்ட பணம் இருக்கு... ஊதியத்துக்கு இல்லையா: சீமான்
சமாதி கட்ட பணம் இருக்கு... ஊதியத்துக்கு இல்லையா: சீமான்
ADDED : ஆக 28, 2024 05:12 AM

தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நேற்று அளித்த பேட்டி:
மத்திய அரசிடமிருந்து நிதி வராததால், ஆசிரியர்களுக்கு ஊதியம் கொடுக்க முடியவில்லை என, தமிழக அரசு கூறுகிறது. சமாதி, கார் பந்தயம், சதுரங்கப் போட்டி, பஸ் ஸ்டாண்ட் கட்டுவது என, கோடிக்கணக்கில் செலவு செய்கின்றனர். ஆனால், ஆசிரியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியவில்லை.
மத்திய அரசிடம் இருந்து தமிழக அரசுக்கான நிதியைக் கேட்டு வாங்க முடியாத நிலையில், எதற்காக தி.மு.க., கூட்டணியில் 40 எம்.பி.,க்கள்? தமிழகம் வளர்ச்சி பெற்றுள்ளது எனக் கூறி வரும் தி.மு.க., முதல்வர் ஸ்டாலினுக்கு உடல் நலம் பாதிப்பு என்றால் ஏன் ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை பெறச் செல்வது இல்லை.
தனியார் மருத்துவமனைக்கு செல்லும்போது, எதற்காக அரசு மருத்துவமனைகள்? பின் தங்கிய ஜாதியினர் முன்னேற்றம் அடைந்த பின், அவர்களுக்கு எதற்காக இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.
விஜய் கட்சியினர் நடத்தும் மாநாட்டில் நான் பங்கேற்பது சரியாக இருக்காது. தமிழர்களுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் உழைக்க நிறைய அரசியல் தலைவர்கள் தேவைப்படுகின்றனர். இவ்வாறு கூறினார்.

