ADDED : ஆக 26, 2024 04:25 AM
சென்னை: மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரண மாக, வரும் 31ம் தேதி வரை, தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழை தொடரும் என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துஉள்ளது.
அந்த மையம் நேற்று வெளியிட்ட அறிக்கை:
நாட்டின் பல்வேறு மாவட்டங்களில், தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. கேரளா உள்ளிட்ட மாநிலங்களில், மீண்டும் கனமழை, மிக கனமழை துவங்க உள்ளது.
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஒரு சில இடங்கள் மற்றும் புதுச்சேரியில், இன்று இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
வரும் 31 வரை இதே நிலை தொடர வாய்ப்புள்ளது.
மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோர பகுதிகள், குமரிக்கடல் பகுதிகளில், வரும் 29 வரை, மணிக்கு, 35 முதல், 45 கி.மீ., வேகத்திலும், இடையிடையே, 55 கி.மீ., வேகத்திலும் சூறாவளி காற்று வீசலாம்.
வடக்கு ஆந்திர கடலோர பகுதிகள், தென்மேற்கு, தென்கிழக்கு, மத்திய மற்றும் வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில், இன்று, மணிக்கு 35 முதல், 45 கி.மீ., வேகத்திலும், இடையிடையே மணிக்கு 55 கி.மீ., வேகத்திலும் சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.