ADDED : மே 31, 2024 02:20 AM

சிதம்பரம்,: சிதம்பரத்தில் வீட்டின் பூட்டை உடைத்து, 20 சவரன் நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
கடலுார் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலை நகர் திடல்மேடு சரோஜினி நாயுடு நகரை சேர்ந்தவர் விஜயராகவன்,41; அண்ணாமலை பல்கலைக்கழக பொறியியல் கல்லுாரியில் தொழில்நுட்ப உதவியாளராக உள்ளார்.
பள்ளி விடுமுறையால், மனைவி மற்றும் குழந்தைகள் நெல்லிக்குப்பத்தில் உள்ள மாமனார் வீட்டிற்கு சென்றனர்.
விஜயராகவன் கடந்த 29ம் தேதி காலை வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்றவர், வேலை முடித்து நெல்லிக்குப்பத்திற்கு சென்று விட்டார். நேற்று காலை வீட்டிற்கு வந்து பார்த்தபோது, முன் கதவு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 20 சவரன் தங்க நகைகள் மற்றும் 1 லட்சம் ரூபாய் பணம் திருடு போனது தெரிய வந்தது.
இதுகுறித்து அண்ணாமலை நகர் போலீசில் விஜயராகவன் புகார் அளித்தார். சிதம்பரம் ஏ.எஸ்.பி., ரகுபதி, அண்ணாமலை நகர் இன்ஸ்பெக்டர் கல்பனா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர்.
அண்ணாமலை நகர் போலீசார் வழக்கு பதிந்து, விசாரிக்கின்றனர்.