ADDED : ஜூலை 05, 2024 01:31 AM

சென்னை:போக்குவரத்து கழகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வு கால பலன்களை உடனே வழங்கக்கோரி, ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அரசு போக்குவரத்து கழகங்களில், 2022ம் ஆண்டு நவ., முதல் ஓய்வு பெற்றவர்களுக்கு வழங்க வேண்டிய வருங்கால வைப்பு நிதி, பணிக்கொடை, விடுப்பு சம்பளம், ஓய்வூதிய ஒப்படைப்பு தொகை போன்றவை இன்னும் வழங்கப்படவில்லை.
இவற்றை உடனே வழங்க வலியுறுத்தி, சென்னை பல்லவன் இல்லம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், 1,000க்கும் மேற்பட்ட ஓய்வூதியர்கள் பங்கேற்றனர்.
அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் பொதுச்செயலர் வீரராகவன் கூறியதாவது:
ஓய்வுபெற்ற 88,000 பேரில், 33,000 பேர், 10,000த்திற்கும் குறைவாகவே ஓய்வூதியம் பெறுகின்றனர். இதனால், அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுஉள்ளது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், உச்ச நீதிமன்றம் எங்களுக்கு சாதகமாக தீர்ப்பளித்துள்ளது.
இருப்பினும், அரசு எங்களுக்கு ஓய்வூதியப் பலன்களை வழங்காமல் இழுத்தடிக்கிறது. எங்கள் பிரச்னை தீரும் வரை போராட்டம் தொடரும்.
இவ்வாறு அவர் கூறினார்.