ADDED : ஏப் 01, 2024 01:21 AM

சென்னை: 'முடக்கப்பட்ட வங்கிக் கணக்குகளை மீட்க, பண மோசடி தொடர்பான ஆவணங்களை, போலீசார் விரைந்து வழங்க வேண்டும்' என, கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.
சைபர் கிரைம் குற்ற வாளிகள், 'ஆன்லைன்' வாயிலாக பண மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களிடம் பணத்தை இழப்போர், உடனடியாக வங்கிக் கணக்கை முடக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகின்றனர்.
அவ்வாறு முடக்கப்படும் வங்கிக் கணக்கில் இருந்து, பாதிக்கப்பட்ட நபர்களால் தொகையை எடுக்க முடிவதில்லை. பாவம் ஒரு பக்கம், பழி ஒரு பக்கம் என, மொத்த பணமும் சிக்கிக் கொள்வதால், பாதிக்கப்படும் நபர்கள் அன்றாட செலவுக்கு கூட கடன் வாங்கக் கூடிய நிலைக்குஆளாகின்றனர்.
இதனால், வழக்குப்பதிவு உள்ளிட்ட ஆவணங்களை காலம் தாழ்த்தாது தர வேண்டும் என, மாநில சைபர் கிரைம் பிரிவில், பாதிக்கப்பட்ட நபர்கள் மனு அளித்துஉள்ளனர்.
அவர்கள் கூறுகையில், 'வங்கிக்கணக்கில் இருந்து, சைபர் கிரைம் குற்றவாளிகள் எடுத்த தொகையை மட்டும் முடக்கி விட்டு, மீதமுள்ள தொகையை உடனடியாக பாதிக்கப்பட்ட நபர்கள் எடுத்துக்கொள்ள வழி வகை செய்ய வேண்டும்.
'வங்கிக்கணக்கை மீட்பதில் சிக்கல் நீடிப்பதால், பண மோசடி தொடர்பான வழக்கு விபரங்களை போலீசார் விரைந்து எங்களுக்கு தர வேண்டும். வங்கிகளுக்கும் இ - மெயில் வாயிலாக அனுப்ப வேண்டும்' என்றனர்.

