'உண்மை வரலாற்றை திரிக்க கூடாது!' பிரபல எழுத்தாளர் வலியுறுத்தல்
'உண்மை வரலாற்றை திரிக்க கூடாது!' பிரபல எழுத்தாளர் வலியுறுத்தல்
ADDED : மே 29, 2024 12:39 AM
சென்னை:“வரலாற்று நாவலாசிரியர்கள், உண்மை வரலாற்றை திரிக்கக் கூடாது,” என, முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரியும், சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளருமான மு.ராஜேந்திரன் பேசினார்.
சென்னை எழும்பூர் ஆவணக் காப்பகத்தில், டாக்டர் ஜி.பெரியசாமி அறக்கட்டளை சொற்பொழிவு நடந்தது.
விற்பனையாகாது
அதில், 'தனி நபர் ஆவணங்களும் வரலாறு எழுதுதலும்' என்ற தலைப்பில் மு.ராஜேந்திரன் பேசியதாவது:
பொதுவாக வரலாற்று நுால்கள் அதிகம் விற்பனையாவதில்லை. அதாவது, அதிகம் பேர் உண்மையான வரலாற்று நுால்களை படிப்பதில்லை.
ஆனால், வரலாற்று புனைவு நாவல்கள் அதிகம் விற்பனையாகி பலரால் படிக்கப்படுகின்றன. இதற்கு, மனிதன் தான் பார்க்காத விஷயங்களை பார்க்கவும், தான் வாழாத வாழ்க்கையை அனுபவிக்கவும், வாழவும் ஆசைப்படுவது தான் காரணம்.
நாடு சுதந்திரத்துக்காக போராடிய காலத்தில், 'வெள்ளையனே வெளியேறு' போராட்டம் உக்கிரமடைந்தது. 1942ல், கல்கி, 'பார்த்திபன் கனவு' என்ற நாவலை எழுதினார். பேரரசர்களாக விளங்கிய சோழர்களை, பல்லவர்கள் அடிமையாக்கி, கப்பம் வசூலித்தனர்.
சோழ அரசனான பார்த்திபன், தாங்கள் இழந்த புகழையும், பெருமைகளையும் மீட்டெடுப்பதற்கான கனவுகளை காண்கிறான். அதை தன் மகனான விக்கிரம சோழனிடம் தெரிவித்து, அவனை தயார்படுத்தி சோழப் பேரரசை மீட்டெடுப்பதை நாவலில் எழுதினார்.
வெற்றி பெற்றது
இதைப்படித்த தமிழர்கள் சுதந்திர போராட்டத்தில் எழுச்சி பெற்றனர். நாட்டை கடைசியாக ஆண்ட போர்ச்சுகீசியர்களுக்கு எதிராக மக்கள் போராடிய போது, 1960ல், அதே நாவல் திரைப்படமாக வெளியாகி வெற்றி பெற்றது.
வியட்னாம் போரின் போது, ஆயுத கிடங்கு எரிக்கப்பட்டது. அதை பின்னணியாக வைத்து, மறவர் இன பெண் குயிலி, பிரிட்டிஷாரை எதிர்த்ததாக, ஜீவபாரதி நாவல் எழுதினார். அது வெற்றி பெற்றது. ஆனால், காலப்போக்கில், குயிலி பட்டியல் இனத்தவராக பரப்பப்பட்டு, மணிமண்டபம் கூட கட்டப்பட்டு விட்டது.
அதேபோல, பாளையக்காரர்களுடன் பாண்டியன் சேர்வைக்காரன், குமாரசாமி நாயக்கர், போத்தி பண்டாரி ஆகிய வீரர்கள் போராடினர். போத்தி என்பவர் பட்டியல் இனத்தவர். அவரைப் பற்றி பிரிட்டிஷ் ஆவணங்களில் பதிவுகள் உள்ள நிலையில், வரலாற்றை எழுதுவோர் விட்டு விட்டனர்.
எதிர்வினை
பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக போராடிய விருப்பாச்சி கோபால் நாயக்கர், 1801ல் நவ., 20ல் இறந்ததாக ஆவணங்கள் கூறும் நிலையில், அரசு செப்., 5ம் தேதியை நினைவு தினமாக கடைப்பிடிக்கிறது. வரலாற்று நாவல்களுக்கு, அரசு எப்போதும் எதிர்வினை ஆற்றுகிறது.
வரலாற்று நாவல்களை வாசகர்கள் விரும்பி படிக்கின்றனர். அவற்றில் உள்ள தகவல்களையே உண்மையாகவும் நம்புகின்றனர். அதனால், வரலாற்று நாவலை எழுதும் முன், தனிநபர் சார்ந்த ஆவணங்களை சரிபார்த்து, அதை திரிக்காமல் எழுத வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில், ஆவணக்காப்பக ஆணையர் நந்தகோபால், உதவி ஆணையர் விஜயராஜா, உதவி பதிப்பாசிரியர் வெண்ணிலா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.