காற்று வீசுவதில் மாறுபாடு வெப்பச்சலன மழை 'பெப்பே!'
காற்று வீசுவதில் மாறுபாடு வெப்பச்சலன மழை 'பெப்பே!'
ADDED : ஆக 22, 2024 11:03 PM

சென்னை:தமிழகத்தில் ஆண்டுதோறும் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் பெய்யும் வெப்பச்சலன மழை இந்த ஆண்டு பெய்யாததற்கு, காற்று வீசுவதில் நிலவும் மாறுபாடே காரணம் என, வல்லுனர்கள் தெரிவித்து உள்ளனர்.
தென்மேற்கு பருவமழை கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களுக்கு பிரதான ஆதாரமாக உள்ளது. தமிழகத்திற்கு வடகிழக்கு பருவமழையே பிரதானம். இருப்பினும், தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில், தென்மேற்கு பருவமழை பெய்யும்.
மற்ற உள்மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில், வெப்பச்சலன மழை தான் பேருதவியாக அமையும். தற்போது இந்த நடைமுறை மாறியுள்ளது.
ஜூலை, ஆகஸ்ட்
தமிழகத்தில் இந்த ஆண்டு, ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் வெப்பச்சலன மழை, எதிர்பார்த்த அளவுக்கு பெய்யவில்லை.
வளிமண்டல மேலடுக்கு மற்றும் கீழடுக்கு சுழற்சி காரணமாக பெய்து வரும் மழையே கைகொடுத்து வருகிறது.
காரணம் என்ன?
தன்னார்வ வானிலை ஆய்வாளர் செல்வகுமார் கூறியதாவது:
தமிழகத்தின் பல பகுதிகளின் மேல், கருமேக கூட்டங்கள் அதிகம் காணப்படுகின்றன. நிலத்தில் இருந்து வெப்பம், இந்த கருமேக கூட்டங்களை நோக்கி சென்று, அதை குளிர்விக்க வேண்டும். அப்போது தான் வெப்பச்சலன மழை பெய்யும்.
ஆனால், காற்று வீசுவதில் ஏற்பட்டுள்ள மாறுபாடு காரணமாக, நிலத்தில் இருந்து வெப்பக்காற்று மேக கூட்டங்களுக்கு செல்லவில்லை; இதனால் வெப்பச்சலன மழை பெய்யவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், 'மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஒரு சில இடங்கள், புதுச்சேரியில் இடி, மின்னலுடன் இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. வரும் 28 வரை இதே நிலை தொடரக்கூடும்' என, தெரிவித்துள்ளது.

