ADDED : மே 09, 2024 11:43 PM

ஆண்டிபட்டி : மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களின் பாசனத்திற்காக வைகை அணையில் இருந்து இன்று முதல் 15 நாட்கள் தண்ணீர் திறந்து விட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: வைகை பூர்வீக பாசனப்பகுதி 3ல் உள்ள ராமநாதபுரம் மாவட்ட கண்மாய்களுக்கு இன்று முதல் மே 14 வரை 5 நாட்களுக்கு 915 மில்லியன் கனஅடியும், பகுதி 2ல் உள்ள சிவகங்கை மாவட்ட கண்மாய்களுக்கு மே 16 முதல் 19 வரை 4 நாட்கள் 376 மில்லியன் கன அடியும், பாசனப்பகுதி 1ல் உள்ள மதுரை மாவட்ட கண்மாய்களுக்கு மே 21 முதல் 26 வரை 6 நாட்களுக்கு 209 மில்லியன் கன அடியும், தண்ணீர் திறப்பு விதிகளின் படி 2: 3:7 என்ற விகிதாச்சார அடிப்படையில் தண்ணீர் திறக்க உத்தரவிடப்படுகிறது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அணை நீர்மட்டம் 56.59 அடியாக இருந்தது (மொத்த உயரம் 71 அடி). மதுரை, தேனி, ஆண்டிபட்டி -- சேடப்பட்டி குடிநீர் திட்டங்களுக்காக வினாடிக்கு 72 கனஅடி நீர் வெளியேறுகிறது. நீர்வரத்து வினாடிக்கு 50 கனஅடியாக இருந்தது.