ADDED : ஜூலை 25, 2024 10:27 AM
சென்னை: நாட்டுப்புறக் கலைஞர்கள் 941 பேருக்கு, நேற்று நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைஞர்கள் நல வாரியம் சார்பில், கல்வி உதவித்தொகை, திருமண உதவித் தொகை, மகப்போறு உதவித் தொகை உட்பட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன.
வாரியத்தில் 55,910 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். வாரியத்தில் உதவி கோரி விண்ணப்பித்தவர்களில், 941 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு 50 லட்சம் ரூபாய் மதிப்பில், நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்கு அடையாளமாக, 10 பேருக்கு 1.21 லட்சம் ரூபாய் மதிப்பிலான காசோலைகளை, தலைமைச் செயலகத்தில், முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், அமைச்சர் சாமிநாதன், தலைமைச் செயலர் சிவ்தாஸ்மீனா, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை செயலர் சந்தரமோகன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.