காங்கிரஸ் ஆட்சியில் என்ன செய்தீர்கள்? முதல்வருக்கு அண்ணாமலை கேள்வி
காங்கிரஸ் ஆட்சியில் என்ன செய்தீர்கள்? முதல்வருக்கு அண்ணாமலை கேள்வி
ADDED : மார் 05, 2025 07:08 PM
சென்னை:'காங்கிரஸ் ஆட்சியில், தமிழை விட சமஸ்கிருதத்திற்கு, அதிக நிதி ஒதுக்கியபோது, என்ன செய்து கொண்டிருந்தீர்கள்' என, முதல்வர் ஸ்டாலினுக்கு, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.
அவரது அறிக்கை:
முதல்வர் ஸ்டாலின், தமிழக எல்லைக்கு அப்பால், தமிழ் மொழியை வளர்க்க என்ன செய்தோம் என்பதை பட்டியலிட முடியாமல், வேறு தலைப்புக்கு செல்ல முடிவு செய்துள்ளார்.
ஆனால், பா.ஜ., தமிழுக்கு செய்ததை நிறைய பட்டியல் இட்டு சொல்ல முடியும்.
பார்லிமென்டில் செங்கோலை நிறுவியது, தமிழ் கலாசாரத்தை பரப்புவதற்கான மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கைகள், பிரதமர் மோடி தமிழ் மொழி மீது வைத்திருக்கும் பற்று என, நிறைய விஷயங்களை வரிசையாக சொல்லலாம்.
ஆனால், தமிழை விட, சமஸ்கிருதத்திற்கு மத்திய அரசு அதிக நிதி ஒதுக்கீடு செய்ததாக குற்றம்சாட்டுகின்றனர். இப்படியொரு குற்றச்சாட்டை நயவஞ்சகர் மட்டுமே வைக்க முடியும்.
கடந்த, 2006 - 14 கால கட்டத்தில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் சமஸ்கிருதத்திற்கு, 675.36 கோடி ரூபாய், தமிழுக்கு, 75 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டது. அப்போது, இதே ஸ்டாலினாகிய நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்? முன்னாள் உள்துறை அமைச்சர் சிதம்பரம், ஹிந்தி மொழியை, நாடு தழுவிய அளவில் பிரபலப்படுத்த, 170க்கும் மேற்பட்ட பரிந்துரைகளை சமர்ப்பித்தபோது, என்ன செய்து கொண்டிருந்தீர்கள்?
அப்போது, வந்தே மாதரத்தில், முதல்வராகிய உங்களுக்கு பிரச்னை இருந்தது. இன்று, வந்தே பாரத்திலும் உங்களுக்கு பிரச்னை இருக்கிறது. இதில் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.