ADDED : ஏப் 16, 2024 04:29 AM

சென்னை : ''விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டால், தேர்தல் நடத்துவதற்கு தேவையான ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் உள்ளன,'' என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்தார்.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி எம்.எல்.ஏ., புகழேந்தி மறைவு காரணமாக, அத்தொகுதி எம்.எல்.ஏ., பதவி, ஏப்ரல், 6 முதல் காலியாக உள்ளது. இதன் விபரத்தை, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு, தேர்தல் கமிஷனுக்கு தெரியப்படுத்தி உள்ளார்.
நாடு முழுதும் லோக்சபா தேர்தல், ஏழு கட்டங்களாக நடத்தப்பட உள்ளது. முதல் கட்ட தேர்தல் 19ம் தேதி நடக்கிறது. தமிழகத்தில் ஒரே கட்டமாக, வரும் 19ம் தேதி தேர்தல் நடக்கிறது. அடுத்தடுத்த கட்ட தேர்தலின் போது, விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இதுகுறித்து, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு கூறுகையில், ''இடைத்தேர்தலை எப்போது நடத்துவது என்பதை, தேர்தல் கமிஷன் தான் முடிவு செய்யும். இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டால், தேர்தல் நடத்துவதற்கு தேவையான ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் உள்ளன,'' என்றார்.

