'ஓசி' என விமர்சித்த மந்திரிகளை ஏன் கண்டிக்கவில்லை?: அண்ணாமலை
'ஓசி' என விமர்சித்த மந்திரிகளை ஏன் கண்டிக்கவில்லை?: அண்ணாமலை
ADDED : மே 18, 2024 04:16 AM

சென்னை: இலவச பஸ் பயண திட்டம் குறித்து, பிரதமர் மோடி பேசியதை விமர்சித்த, அமைச்சர் தியாகராஜனுக்கு, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை பதிலடி கொடுத்து உள்ளார்.
சமீபத்தில் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த பிரதமர் மோடி,'சில அரசியல் கட்சிகள் பெண்களுக்கு இலவச பஸ் பயண திட்டத்தை அளித்துள்ளன. இதனால், மெட்ரோ ரயில் பயணியரின் எண்ணிக்கை சரிந்துள்ளது' என்று குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு, தமிழக அமைச்சர் தியாகராஜன் தன் சமூக வலைதளத்தில் அளித்த பதில்:
பிரதமர் ஏன், 10 ஆண்டுகளாக பத்திரிகையாளர்களை சந்திக்கவில்லை என்பதை, இந்த காட்சி விளக்குகிறது.
பத்திரிகையாளர் தர்க்க ரீதியாக சில கேள்விகளை கேட்டிருக்க வேண்டும். ஒரு இடத்தில் மெட்ரோ ரயில் சேவை மட்டும் இருந்து, பஸ் சேவை இல்லாமல் இருக்கிறதா.
பொது போக்குவரத்தை பொறுத்தவரை, மாணவர்கள், முதியோர், மாதாந்திர பஸ் பாஸ் என, சலுகைகள் வழங்கப்படவில்லையா. பஸ் சேவையானது மெட்ரோ ரயிலின் சேவையை பாதிக்கிறதா என்று கேட்டிருக்க வேண்டும்.
சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட பணிக்கு, இன்னும் நிதி வழங்க ஒப்புதல் தராமல், மத்திய அமைச்சரவை பல ஆண்டுகளாக கிடப்பில் வைத்து உள்ளது.
சென்னை மெட்ரோவுக்கு பிறகு வந்த, பிற நகரங்களுக்கான திட்ட அறிவிப்புகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. மெட்ரோ ரயிலில், ஒருவர் தான் செல்ல வேண்டிய இடத்திற்கு செல்ல முடியாது என்பதை பிரதமரிடம் சுட்டிக்காட்டி இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்திருந்தார்.
இதற்கு தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளனர்.
அவரது அறிக்கை:
இலவச பஸ் வெற்றிகரமான திட்டம் என்று கூறும் அமைச்சர் தியாகராஜன், அத்திட்டத்தை, 'ஓசி' என்று விமர்சித்த சக அமைச்சர்களை ஏன் கண்டிக்கவில்லை.
தமிழகத்தில், தி.மு.க., ஆட்சியில், ஒவ்வொரு அமைச்சரும் பயனாளிகளை விமர்சிப்பது போல எங்கும் நடப்பதில்லை.
பால் விலை உயர்வு, மின் கட்டணம் உயர்வு என, அத்தியாவசிய சேவைகளுக்கான கட்டணங்களை உயர்த்தி விட்டு, அரசு செலவுகளை மிச்சப்படுத்தியுள்ளது என்று கூறுவது நகைச்சுவை.
தி.மு.க., ஆட்சிக்கு வந்ததில் இருந்து, 6,000 பஸ்கள் இயக்கப்படாததால், பயணியருக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளாக மின்சார பஸ் கொள்முதல் அறிவிப்பாகவே உள்ளது.
தி.மு.க.,வின் மாபெரும் ஊழலை அம்பலப்படுத்தியதற்காக, நிதித்துறையை இழந்த அமைச்சர், தனக்கு சம்பந்தம் இல்லாத விஷயங்களை பற்றி பேசுகிறார். அரசு பள்ளிகளுக்கு உபகரணங்கள் வாங்குவதற்கான, 'டெண்டர்' ஆணை ஏன் கேரளா நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது.
மத்திய அரசின், 'சமக்ரா சிக் ஷா' திட்டத்தின் ஒரு பகுதியை கொண்ட, 1,000 கோடி ரூபாய் டெண்டரில், தமிழக அரசின், 'எல்காட்' நிறுவனத்திற்கு ஏன் வாய்ப்பு வழங்கப்படவில்லை என்பதற்கு, அமைச்சர் தியாகராஜன் பதில் அளிப்பாரா?
இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

