ஆம்ஸ்ட்ராங் கொலையில் இளைஞர் காங்., நிர்வாகி கைது அனைத்துக் கட்சி பட்டியலை முடித்து வைத்த போலீஸ்
ஆம்ஸ்ட்ராங் கொலையில் இளைஞர் காங்., நிர்வாகி கைது அனைத்துக் கட்சி பட்டியலை முடித்து வைத்த போலீஸ்
ADDED : ஆக 07, 2024 09:08 PM

சென்னை:ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அதிரடி திருப்பமாக, தமிழக இளைஞர் காங்கிரஸ் பொதுச்செயலரும், ரவுடி நாகேந்திரனின் மகனுமான அஸ்வத்தாமனை, தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், 52, கொலை வழக்கில், ரவுடிகள், கூலிப்படையினர், அரசியல் கட்சி பிரமுகர்கள், வழக்கறிஞர்கள் என, 21 பேர் கைது செய்துள்ளனர். அவர்களில், ரவுடிகள் ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த பொன்னை பாலு, 39, சென்னை திருநின்றவூரைச் சேர்ந்த ராமு, 38, சிவசக்தி, 25, வழக்கறிஞர் அருள், 33, திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்துாரைச் சேர்ந்த, அ.தி.மு.க., கவுன்சிலராக இருந்த ஹரிதரன், 37 ஆகியோரை காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.
அருளிடம் விசாரித்தபோது, ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு, வேலுார் சிறையில் ஆயுள் தண்டனை கைதியாக உள்ள ரவுடி நாகேந்திரன் மூளையாக செயல்பட்டுள்ளதாகவும், அவரது மகன் அஸ்வத்தாமன் தான் கூலிப்படையினரை ஏவியதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார். இதையடுத்து, சென்னை வியாசர்பாடி, எஸ்.எம்.நகரைச் சேர்ந்த அஸ்வத்தாமன், 32 நேற்று கைது செய்யப்பட்டார்.
யார் இந்த அஸ்வத்தாமன்? போலீசார் கூறியதாவது:
அஸ்வத்தாமன் சட்டம் படித்துள்ளார். தந்தையின் செல்வாக்கை பயன்படுத்தி மாமூல் வசூலிப்பு, ஆள் கடத்தல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வந்தார். காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுார் தொழிற்சாலைகளில், பழைய இரும்பு பொருட்களை, 'டெண்டர்' எடுத்து கோடிக்கணக்கில் சம்பாதித்து வரும் முக்கிய புள்ளி ஒருவரிடம் அடைக்கலம் தேடி தஞ்சம் புகுந்தார். இதற்கு நாகேந்திரன் தான் ஏற்பாடு செய்துள்ளார்.
இளைஞர் காங்., பொதுச் செயலராக இருந்த அஸ்வத்தாமன், கடந்தாண்டு கூட்டாளிகளுடன் சேர்ந்து, காங்கிரஸ் கட்சியின் திருவள்ளூர் வடக்கு மாவட்டச்செயலர் ஜெயபிரகாஷ், 30 என்பவரை கடத்தி, துப்பாக்கியை காட்டி மிரட்டி மாமூல் வசூலித்துள்ளார்.
இது தொடர்பான வழக்கில், அஸ்வத்தாமன் கைது செய்யப்பட்டார்; துப்பாக்கியும் பறிமுதல் செய்யப்பட்டது. பின், ஜாமினில் அஸ்வத்தாமன் வெளியே வந்தார். அவர் மீது, ஜெயபிரகாஷ் புகார் அளித்ததின் பின்னணியில், ஆம்ஸ்ட்ராங் இருந்துள்ளார். இது நாகேந்திரனுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.
ஆம்ஸ்ட்ராங்கிற்கு மிரட்டல்
சிறையில் இருந்தபடியே, மொபைல் போன் வாயிலாக ஆம்ஸ்ட்ராங்கை தொடர்பு கொண்டு, 'என் மகன் விவகாரத்தில் தலையிடாதே' என, நாகேந்திரன் மிரட்டி உள்ளார். ஒரு முறை ஆம்ஸ்ட்ராங்கை நேரில் சந்தித்த அஸ்வத்தாமன், அப்பா பேசுவதாக மொபைல் போனை கொடுத்துள்ளார். எதிர் முனையில் பேசிய நாகேந்திரன், 'என் மகனுக்கு எதுவும் ஆக கூடாது. ஜெயபிரகாஷை கடத்திய விவகாரத்தை சுமூகமாக முடித்த வை' என, கூறியுள்ளார்; உடனே, மறுத்துள்ளார் ஆம்ஸ்ட்ராங். இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதன் பின்னணியில் தான் கொலை நடந்திருப்பது தெரியவந்துள்ளது.
இவ்வாறு போலீசார் கூறினர்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், இதுவரை கைதான நபர்களில், வழக்கறிஞர் அருள், தி.மு.க.,வைச் சேர்ந்தவர். அவரது கூட்டாளி சதீஷ், தி.மு.க.,வைச் சேர்ந்தவர். இவரது தந்தை தி.மு.க.,வில், திருவள்ளூர் மத்திய மாவட்ட இலக்கிய அணி நிர்வாகியாக உள்ளார்.வழக்கறிஞர் ஹரிஹரன், த.மா.கா., மாணவர் அணி நிர்வாகியாகவும், ரவுடி அஞ்சலை, பா.ஜ.,வில் நிர்வாகியாகவும், செல்வராஜ் என்பவர், அக்கட்சி உறுப்பினராகவும் செயல்பட்டுள்ளனர்.
மேலும், ஹரிதரன், மலர்க்கொடி ஆகியோர், அ.தி.மு.க., நிர்வாகிகளாக இருந்தனர். தற்போது கைதான அஸ்வத்தாமன், தமிழக இளைஞர் காங்கிரஸ் நிர்வாகி என்பதால், சர்வ கட்சியினரும் சம்பந்தப்பட்டதாக, இந்த வழக்கு மாறியிருக்கிறது.
அஸ்வத்தாமனுடன் சேர்த்து, இதுவரை 6 வழக்கறிஞர்கள் கைதாகி உள்ளனர். 'அனைத்து கட்சியை சேர்ந்தோரும் சதி திட்டம் தீட்டி, ஆம்ஸ்ட்ராங் கொலையை செய்துள்ளது வெளிப்பட்டுள்ளது' என போலீசார் தெரிவித்தனர்.