ADDED : ஜன 09, 2024 02:48 AM
சேலம்: கோவை, சிங்காநல்லுார் ஸ்டேட் பாங்க் காலனியை சேர்ந்தவர் பெருமாள், 68, சேலம் அஸ்தம்பட்டி மாரியம்மன் கோவில் அருகே, நகை அடகு கடை வைத்துள்ளார்.
இவரது கடையில், புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி, ஆலவாயில் பகுதியை சேர்ந்த நந்தகோபால், 30, என்பவர் பணியாற்றினார். பெருமாளின் உறவினரான இவர், அடகு கடையில் மேலாளராக வேலை செய்தார்.
கடந்த, 1ல், தன் அடகு கடையில் பெருமாள் ஆய்வு செய்த போது, வாடிக்கையாளர்கள், 415 பேர் அடகு வைத்திருந்த நகைகளை காணவில்லை. ஆனால், வேறு இடங்களில் அந்த நகைகளை அடகு வைத்திருப்பதற்கான ரசீதுகள் சிக்கின.
இதுபற்றி, அஸ்தம்பட்டி போலீசில், பெருமாள் புகார் அளித்தார்; போலீசார் விசாரித்தனர்.
அடகு நகைகளை, வங்கியில் குறைந்த வட்டிக்கு நந்தகோபால் அடகு வைத்துள்ளதும், சில நகைகளை விற்பனை செய்ததும் தெரிந்தது.
மேலும் வாடிக்கையாளர்கள் பலர், தங்களின் நகைகளை மீட்டு சென்றது போல, போலியான ஆவணங்களை தயாரித்து, உரிமையாளர் பெருமாளை நம்ப வைத்துள்ளார்.
அதன் மூலம் மொத்தமாக, 10 கிலோ தங்க நகையை மோசடி செய்திருப்பது அம்பலமானது. அதன் மதிப்பு, 4.17 கோடி ரூபாய்.
இது தொடர்பாக நந்தகோபால் மீது பல பிரிவுகளில் வழக்குப் பதிந்து, அவரிடம் விசாரணை நடக்கிறது. அவரது வாக்குமூலத்தின்படி, முதல்கட்டமாக, 1.25 கிலோ தங்க நகையை போலீசார் மீட்டுள்ளனர்.