2வது கட்டமாக 1,000 மினி பஸ்கள் வழித்தடம் தேர்வில் வருது மாற்றம்
2வது கட்டமாக 1,000 மினி பஸ்கள் வழித்தடம் தேர்வில் வருது மாற்றம்
ADDED : பிப் 05, 2026 02:50 AM

சென்னை: தமிழகத்தில் இரண்டாவது கட்டமாக, 1,000 மினி பஸ்களை இயக்குவதற்கு முன், வழித்தடங்கள் குறித்து, பயணியர் சங்கத்தினர் மற்றும் மினி பஸ் உரிமையாளர்களிடம் கருத்து கேட்க, அரசு போக்குவரத்து ஆணையரகம் முடிவு செய்து உள்ளது.
சென்னை உட்பட பல்வேறு நகரங்களில் தேர்வு செய்யப்பட்ட வழித்தடங்களில், மினி பஸ்களை இயக்க, 2,000க்கும் மேற்பட்டோருக்கு, 'பர்மிட்' வழங்கப்பட்டுள்ளது. தற்போது, மாநில முழுதும், 1,500 மினி பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
ஆட்டோ, ஷேர் ஆட்டோவை விட கட்டணம் குறைவு என்பதால், பயணியரிடம் வரவேற்பு உள்ளது. ஆனாலும், வழித்தடங்களை மாற்ற வேண்டும் என, மினி பஸ் உரிமையாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இதற்கிடையே, இரண்டாவது கட்டமாக, மாநிலம் முழுதும், 1,000 மினி பஸ்களை இயக்க, அரசு முடிவு செய்துள்ளது. வழித்தடங்களை தேர்வு செய்வதிலும் மாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து, போக்குவரத்து ஆணையரக அதிகாரிகள் கூறியதாவது:
முதல் கட்டமாக, 2,857 வழித்தடங்கள் கண்டறியப்பட்டன. இதில், 2,034 வழித் தடங்களில் மினி பஸ்கள் இயக்க முடிவு செய்யப்பட்டது. அவற்றில், 1,500 மினி பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இரண்டாவது கட்டமாக, 800 முதல் 1,000 மினி பஸ்களை இயக்க உள்ளோம்.
இந்த முறை மினி பஸ் வழித்தடம் தேர்வு செய்வதில், மினி பஸ் உரிமையாளர்கள், பயணியர் நல சங்கங்கள் உள்ளிட்டோரிடம் கருத்து கேட்டு, அதற்கேற்ப மாற்றம் செய்ய உள்ளோம். இதற்கான, அரசாணை விரைவில் வெளியிடப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

