ADDED : டிச 24, 2024 07:12 AM
சபரிமலை : இயற்கை கோரத்தாண்டவம் ஆடிய வயநாட்டிலிருந்து 101 வயது மூதாட்டி 18 படிகளில் ஏறி வந்து ஐயப்பனை தரிசனம் நடத்தினார்.
கேரள மாநிலம் வயநாடு மீனங்காடி மூன்றானை குழியை சேர்ந்தவர் பாருக்குட்டி அம்மா. கடந்த ஆண்டு 100 வயதான நிலையில் இருமுடி கட்டு ஏந்தி வந்து ஐயப்பனை தரிசனம் செய்தார். 101 -வது வயதில் இந்த ஆண்டும் ஐயப்பனை காணும் ஆர்வத்தில் வீட்டில் இருந்து பேரன், கொள்ளு பேரன்களுடன் இருமுடி கட்டி சபரிமலை வந்தார். வயோதிகத்தால் இம்முறை அவர் டோலியில் சன்னிதானம் வந்தார்.
அவருக்கு பிற பக்தர்கள் வழிவிட 18 படிகளில் ஏறி ஸ்ரீகோயில் முன் வந்த அவருக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. பின்னர் தந்திரி கண்டரரு ராஜீவரரு , மேல் சாந்தி அருண்குமார் நம்பூதிரி ஆகியோரை சந்தித்து ஆசி பெற்ற பின்னர் அடுத்த ஆண்டும் ஐயப்பனை காண வருவேன் என்று கூறி ஊர் திரும்பினார்.
திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் பி. எஸ் .பிரசாந்த் பாருக்குட்டி அம்மாவுக்கு சால்வை அணிவித்தார்.