ADDED : மார் 27, 2025 01:04 AM
சென்னை:''காலியாக உள்ள 1,100 ஊராட்சி செயலர் பணியிடங்கள் இரண்டு மாதங்களில் நிரப்பப்படும்,'' என, ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பெரியசாமி தெரிவித்தார்.
சட்டசபையில் நடந்த விவாதம்:
அ.தி.மு.க., - கடம்பூர் ராஜு, ''தீப்பெட்டி தொழிலை பாதுகாக்க வேண்டும். லைட்டர் இறக்குமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. உதிரி பாகங்களை எடுத்து வந்து லைட்டர் தயாரித்து விற்கின்றனர்; அதை தடுக்க வேண்டும்,'' என கோரிக்கை விடுத்தார். மேலும், ''காலியாக உள்ள ஊராட்சி செயலர் பதவிகளை நிரப்ப வேண்டும்,'' என்றார்.
அதற்கு பதிலளித்த அமைச்சர் பெரியசாமி, ''தீப்பெட்டி தொழிலை இயந்திரமயமாக்குவதற்கு, 2001ம் ஆண்டு நாடு முழுதும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. நான் இருக்கும் வரை இயந்திரமயமாக்கப்படாது என கருணாநிதி உத்தரவாதம் கொடுத்தார். மாநிலம் முழுதும் உள்ள 12,214 ஊராட்சிகளில், 1,100 ஊராட்சி செயலர்கள் பதவி காலியாக இருக்கிறது. இரண்டு மாதங்களில் அவற்றை நிரப்ப, நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.