ADDED : செப் 19, 2024 12:23 AM

சென்னை:கடலுார் மாவட்டம், சிதம்பரத்தைச் சேர்ந்த, 17 பெண்கள் உட்பட, 30 பேர் கொண்ட குழுவினர், உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள ஆதிகைலாஷ் கோவிலுக்கு, கடந்த 1ம் தேதி சுற்றுலா சென்றனர்.
தரிசனம் முடிந்து புறப்பட்டபோது, தவாகன் - தானாக்பூர் தேசிய நெடுஞ்சாலையில், திடீரென பெரும் நிலச்சரிவு ஏற்பட்டதால், போக்குவரத்து முடங்கியது. ராணுவ உதவியுடன் 30 பேரும் மீட்கப்பட்டனர்.
இவர்களில், 17 பேர் விமானம் வாயிலாக, நேற்று முன்தினம் சென்னை வந்தனர்.
இரண்டாம் கட்டமாக, 13 பேர் சந்திகிராந்தி விரைவு ரயிலில் நேற்று மாலை 4:14 மணிக்கு எழும்பூருக்கு வந்தனர். அவர்களை, தமிழக அமைச்சர்கள் பன்னீர்செல்வம், மஸ்தான், கணேசன் ஆகியோர் வரவேற்றனர்.
சென்னை திரும்பியவர்கள் கூறுகையில், 'ராட்சத பாறைகள் கண்முன்னே சரிந்ததைக் கண்டு, உடல் நடுக்கத்துடன் அதிர்ந்து போனோம். எங்களது ஆன்மிகப் பயணம், த்ரில்லர் கலந்த பயண மாக மாறிவிட்டது. இதை எங்களால் மறக்க முடியாது. எங்களுக்கு உதவிய அரசுக்கும், ராணுவத்துக்கும் நன்றி' என்றனர்.

