மணிக்கு 160 கி.மீ., வேகத்தில் ஓடும் ரயில்கள்: முக்கிய வழித்தடங்களில் இயக்க திட்டம்
மணிக்கு 160 கி.மீ., வேகத்தில் ஓடும் ரயில்கள்: முக்கிய வழித்தடங்களில் இயக்க திட்டம்
ADDED : மார் 11, 2024 11:55 PM

சென்னை: ''சென்னை - பெங்களூரு உள்ளிட்ட முக்கிய வழித்தடங்களில், வரும் ஆண்டுகளில் மணிக்கு 160 கி.மீ., வேகத்தில் விரைவு ரயில்கள் இயக்கப்படும்,'' என, தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஆர்.என்.சிங் தெரிவித்தார்.
சென்னையில் உள்ள தெற்கு ரயில்வே தலைமை அலுவலகத்தில், நேற்று அவர் அளித்த பேட்டி:
பிரதமர் மோடி காணொலி காட்சி வாயிலாக இன்று நாடு முழுதும், 85,000 கோடி ரூபாய்க்கு மேலான ரயில்வே திட்டங்களை துவங்கி வைக்கிறார்.
10 வந்தே பாரத் ரயில்கள் மற்றும் இதர ரயில் சேவை துவக்கம்
சென்னை சென்ட்ரல் - மைசூரு இடையே புதிய வந்தே பாரத் ரயில்
திருவனந்தபுரம் -- காசர்கோடு, வந்தே பாரத் ரயில் சேவை மங்களூரு வரை நீட்டிப்பு
கேரளா மாநிலம் கொல்லம் -- ஆந்திர மாநிலம் திருப்பதி விரைவு ரயில் சேவை துவக்கம்
பேசின்பாலத்தில் புதிதாக அமைக்கப்பட்ட 'பிட் லைன்'
சிங்க பெருமாள் கோவில், கங்கைகொண்டான், தேனி, பட்டுக்கோட்டை, திருத்துறைப்பூண்டி, வள்ளியூர் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள சரக்கு முனையம்
திண்டுக்கல், ஈரோடு, திருச்சி, பாலக்காடு ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள மலிவு விலை மருந்தகம்
205 ரயில் நிலையங்களில், 'ஒரு நிலையம் ஒரு தயாரிப்பு' அரங்கு போன்றவற்றை பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார்.
தெற்கு ரயில்வேயில், அதிநவீன சிக்னல் வசதிகளுடன் கூடிய ரயில் பாதைகள் மேம்பாட்டு பணி தொடர்ந்து நடந்து வருகிறது. சென்னை சென்ட்ரல் - பெங்களூரு தடத்தில் தெற்கு ரயில்வேக்கு உட்பட்ட பகுதிகளில், தற்போது ரயில்கள் மணிக்கு 130 கி.மீ., வேகத்தில் செல்கின்றன.
இந்த தடத்தில் எஞ்சி யுள்ள பகுதிகளிலும், தென்மேற்கு ரயில்வே பாதை மேம்படுத்தும் போதும், வந்தே பாரத் ரயில் நான்கு மணி நேரத்தில் செல்ல முடியும். அடுத்த சில ஆண்டுகளில் பல்வேறு முக்கிய வழித்தடங்களில் மணிக்கு, 160 கி.மீ., வேகத்தில் ரயில்கள் இயக்கப்படும்.
இதேபோல, அடுத்த 3 அல்லது 4 ஆண்டுகளில், தற்போதுள்ள பழைய ஐ.சி.எப்., பெட்டிகள் முழுமையாக நீக்கப்பட்டு, அனைத்தும் எல்.எச்.பி., என்ற நவீன பெட்டிகளாக மாற்றப்படும். சென்னை -- கன்னியாகுமரி வரை இரட்டைப்பாதை பணி முடிவடையும்போது, கூடுதல் ரயில் சேவை வழங்கப்படும்.
ஓசூர் - கிருஷ்ணகிரி- பெங்களூருக்கு புதிய ரயில் பாதை அமைக்க 2,500 கோடி ரூபாய்க்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு உள்ளது. விரைவில் ரயில்வே வாரியத்திடம் ஒப்படைக்கப் படும்.
சென்னை கடற்கரை -- எழும்பூர் நான்காவது பாதை பணி வரும் ஜூனில் முடிவடையும்.
அதன்பிறகு, சென்னை கடற்கரை -- வேளச்சேரி வரை மின்சார ரயில் சேவை மீண்டும் துவங்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்வின் போது, சென்னை ரயில் கோட்ட மேலாளர் விஸ்வநாத் ஈர்யா, ரயில்வே பாதுகாப்பு படை தலைமை பாதுகாப்பு ஆணையர் ஈஸ்வர ராவ் உட்பட அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.

