ADDED : பிப் 12, 2024 06:00 AM
திருநெல்வேலி : திருநெல்வேலி அருகே நடந்த இரு கொலைகளில் தொடர்புடைய மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.
திருநெல்வேலி, சிவந்திபட்டியை அடுத்துள்ள பற்மநாதபுரத்தை சேர்ந்தவர் ஐயப்பன் 27. செய்துங்கநல்லூர் அருகே செங்கல் சூளையில் வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் மாலையில் வீட்டுக்கு டூவீலரில் வந்து கொண்டிருந்தார்.
துாத்துக்குடி மாவட்டம் சத்தக்காரன்பட்டி பகுதியில் அவரை வழிமறித்த 6 பேர் கும்பல் சரமாரியாக அரிவாளால் வெட்டிக் கொலை செய்தனர். செய்துங்கநல்லூர் போலீசார் அவரது உடலை மீட்டனர்.
கொலை தொடர்பாக அதே கிராமத்தைச் சேர்ந்த அன்பு 23, சிவபெருமாள் 19, சமாதானபுரத்தை சேர்ந்த கார்த்திக் 29 ஆகியோரை கைது செய்தனர்.
போலீஸ் விசாரணையில் அவர்கள் ரெட்டியார்பட்டி டாஸ்மாக் அருகே வாலிபர் ஒருவரை கொலை செய்துவிட்டு தான் இந்த கொலையை செய்ததாக தகவல் தெரிவித்தனர். பெருமாள்புரம் போலீசார் நள்ளிரவில் சம்பவ இடத்தில் பார்த்தபோது சமாதானப்புரத்தைச் சேர்ந்த பாபு செல்வம் 21, என்பவர் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரது உடலை மீட்டனர்.
கொலைக்கான காரணம்
சிவந்திபட்டி அருகே நடந்த கோவில் கொடை திருவிழாவில் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. ஐயப்பன் புகாரின் பேரில் சிவந்திபட்டி போலீசார் மூவரை கைது செய்தனர்.
முன்விரோதத்தில் கொலை நடந்துள்ளது. தொடர்புடைய மேலும் இருவரை பெருமாள்புரம் போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர்.