பதவியேற்பு விழாவில் அமைச்சர்கள் 2 பேர் ஆப்சென்ட்; காரணம் இதுதான்!
பதவியேற்பு விழாவில் அமைச்சர்கள் 2 பேர் ஆப்சென்ட்; காரணம் இதுதான்!
UPDATED : அக் 01, 2024 08:02 PM
ADDED : செப் 29, 2024 07:47 PM

சென்னை; சென்னையில் நடைபெற்ற புதிய அமைச்சர்கள் பதவியேற்பு விழாவில் ஏற்கனவே அமைச்சர்களாக இருக்கும் 2 பேர் கலந்து கொள்ளவில்லை. அதற்கான காரணங்கள் என்ன என்பது தற்போது வெளியாகி உள்ளது.
தமிழகத்தின் துணை முதல்வராக உதயநிதி இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். அமைச்சர்களாக செந்தில் பாலாஜி, பனமரத்துப்பட்டி ராஜேந்திரன், கோவி. செழியன், ஆவடி நாசர் ஆகியோர் இன்று பதவி ஏற்றுக் கொண்டனர். துணை முதல்வராக உதயநிதி பொறுப்பேற்றதை தமிழகம் முழுவதும் உள்ள தி.மு.க., தொண்டர்கள் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் உற்சாகமாக கொண்டாடினர்.
தமிழக அரசியல் தலைவர்கள், மற்ற மாநில அரசியல் கட்சி தலைவர்கள், திரையுலகத்தை சேர்ந்தவர்கள் என பல தரப்பினரும் உதயநிதிக்கு வாழ்த்துகளை கூறி வருகின்றனர். இன்று 4 அமைச்சர்கள் பதவியேற்பு விழா சென்னை ராஜ் பவனில் நடைபெற்றது. அப்போது பல்வேறு சுவாரசியமான நிகழ்வுகளை பார்க்க முடிந்தது.
அதே நேரத்தில் அமைச்சரவையில் ஏற்கனவே இடம்பெற்றுள்ள அமைச்சர்களில் 2 பேர் இன்றைய 4 அமைச்சர்கள் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளவில்லை. அவர்கள் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், மற்றொருவர் சிவசங்கர். புதிய அமைச்சர்கள் பதவியேற்ற பின்னர், கவர்னருடன் அனைவரும் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அதில் இவர்கள் 2 பேர் மட்டும் இல்லாதது தெரியவந்துள்ளது.
இருவரின் வருகை இல்லாதது குறித்து வெளியான பின்னணி தகவல்கள் வருமாறு;
மதுரையில் உள்ள தமது தாயார் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு உள்ளதால் அங்கு பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் சென்றுள்ளார். பின்னர் மதியம் 1.30 மணி அளவில் சென்னைக்கு விமான டிக்கெட் முன்பதிவு செய்திருந்ததாக தெரிகிறது. ஆனால், விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக உரிய நேரத்தில் புறப்படாததால் அவரால் நிகழ்ச்சியில் பங்கேற்க முடியவில்லை என்று கூறப்படுகிறது. அதன் காரணமாகவே திட்டமிட்டபடி அவரால் நிகழ்ச்சியில் பங்கேற்க இயலவில்லை.
இதுகுறித்து முதல்வரிடம் தொலைபேசியில் விளக்கம் அளித்து உள்ளதாகவும், நேரிலும் சென்று சூழ்நிலையை விவரிப்பார் என்றும் தெரிகிறது. விழாவுக்கு வரமுடியாமல் போனாலும் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமது எக்ஸ் வலைதள பக்கத்தில் வாழ்த்தை பகிர்ந்துள்ளார்.
மற்றொரு அமைச்சரான சிவசங்கர் தமது 2வது மகன் படிப்புக்காக லண்டன் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 26ம் தேதியே அவர் குடும்பத்துடன் லண்டன் சென்றுவிட்டதாக தெரிகிறது. முறைப்படி சிவசங்கர் முதல்வரிடம் அனுமதி பெற்றுத்தான் சென்றிருக்கிறார். அமைச்சரவை மாற்றம் செய்தி நேற்றுதான் வெளியானதால் உடனடியாக சிவசங்கரால் லண்டனில் இருந்து சென்னைக்கு வரமுடியவில்லை என்று கூறப்படுகிறது.
இவ்வாறு அந்த தகவல்கள் கூறுகின்றன.