ADDED : அக் 22, 2024 02:21 AM

சென்னை : விழுப்புரத்தை சேர்ந்தவர் வாசுகி; அமெரிக்காவில், ஐ.டி., துறையில் வேலை பார்க்கிறார். இவர், போரூர் கொளப்பாக்கம் கிராமத்தில், 6,003 சதுரடி நிலத்தை வாங்கியுள்ளார்.
அமெரிக்காவில் பணியாற்றும் அண்ணாநகரை சேர்ந்த செந்தாமரையும், வாசுகி வாங்கிய அதே பகுதியில், 2,277 சதுரடி மனை வாங்கிஉள்ளார்.
மொத்தம், 1.80 கோடி ரூபாய் மதிப்புள்ள இவ்விரண்டு நிலத்தையும், இருவரும் எழுதி கொடுத்த பொது அதிகாரத்தின்படி, திருவான்மியூர், திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் சிவபிரகாசம், 58, பாதுகாத்து வந்துள்ளார்.
இந்நிலையில், இரண்டு மனைக்கும் சிவபிரகாசம் வில்லங்க சான்று போட்டு பார்த்தார்.
அப்போது, வாசுகி மற்றும் செந்தாமரைக்கு வாரிசுகள் இருப்பது போன்று போலியான சான்று தயாரித்து, அவர்களுக்குரிய மனையை, மர்ம நபர்கள், 'செட்டில்மென்ட்' பத்திரப்பதிவு செய்ததும்; பின், பம்மல் சார் - பதிவாளர் அலுவலகத்தில், வேறு நபர்களுக்கு கிரையம் செய்து கொடுத்ததும் தெரிய வந்தது.
இதுகுறித்த புகாரில், ஆவடி போலீசார் விசாரித்து, மோசடியாக நிலத்தை விற்ற பாலவாக்கத்தை சேர்ந்த வெங்கடேசன், 42, என்பவரை கடந்த 5ம் தேதி கைது செய்தனர்.
இவ்வழக்கில் போலி ஆவணம் தயாரிக்கவும், ஆள்மாறாட்ட நபர்களை ஏற்பாடு செய்து, சொத்தை விற்கவும் உறுதுணையாக இருந்த, நெசப்பாக்கத்தை சேர்ந்த தங்கராஜ் 59, போரூரை சேர்ந்த மெகர், 61, ஆகிய இருவரையும், போலீசார் நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.

