ADDED : செப் 09, 2026 10:59 PM
சென்னை: தமிழகத்தில் நகர்ப்புற வளர்ச்சியை ஒருங்கிணைத்து மேம்படுத்த, கோவை, நீலகிரி உட்பட ஆறு மாவட்டங்களை உள்ளடக்கிய, இரண்டு மண்டல திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.
நகர் ஊரமைப்பு துறை, உள்ளூர் அளவில் முழுமை திட்டங்கள், விரிவான வளர்ச்சி திட்டங்கள் தயாரிப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதில், ஒன்றுக்கு மேற்பட்ட மாவட்டங்களை ஒருங்கிணைக்கும் வகையில், மண்டல திட்டங்கள் தயாரிக்கப்படும் என, 2020ல் அறிவிக்கப்பட்டது.
இது தொடர்பாக, நகர் ஊரமைப்பு துறையான டி.டி.சி.பி., அதிகாரி ஒருவர் கூறியதாவது:
நகர் ஊரமைப்பு துறை வாயிலாக, முழுமை திட்டங்கள் தயாரிக்கப்பட்ட பகுதிகளை ஒருங்கிணைக்கும் வகையில், மண்டல திட்டங்கள் தயாரிக்கப்படுகின்றன. தற்போது, மூன்று இடங்களில் மண்டல திட்ட பணிகள் நடந்து வருகின்றன.
இதில், முதலாவதாக மதுரை, கோவை, நீலகிரி மாவட்டங்களை உள்ளடக் கிய, ஒரு மண்டல திட்டம் தயாரிக்கும் பணிகள் முடிந்துள்ளன. இதில், தேவையான திருத்தங்கள் செய்து, அரசின் பரிசீலனைக்கு அனுப்பி இருக்கிறோம்.
இதே போன்று, வேலுார், விழுப்புரம், தஞ்சாவூர் மாவட்டங்களை உள்ளடக்கிய, இரண்டா வது மண்டல திட்ட வரைவு தயாரிக்கும் பணி முடிந்துள்ளது. இதுவும் அரசின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டு உள்ளது.
இந்த இரண்டு மண்டல திட்டங்களுக்கும் ஒப்புதல் கிடைத்தவுடன், வரைவு ஆவணங்கள் மக்கள் பார்வைக்கு வரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
