'கன்ட்ரோல் ரூம்' போட்டதால் தலைவலி; தமிழக பதிவுத்துறையில் தினமும் குவியுது 200 புகார்
'கன்ட்ரோல் ரூம்' போட்டதால் தலைவலி; தமிழக பதிவுத்துறையில் தினமும் குவியுது 200 புகார்
ADDED : நவ 11, 2025 04:44 AM

சென்னை: பதிவுத்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தினமும், 200 புகார்கள் வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழகம் முழுதும், 587 சார் - பதிவாளர் அலுவலகங்கள் செயல்படுகின்றன. தாமதமின்றி பத்திரங்களை பதிவு செய்து கொடுக்க வேண்டும் என, சார் - பதிவாளர்களுக்கு பதிவுத் துறை தலைமை அறிவுறுத்தி உள்ளது.
மேலும், சார் - பதிவாளர் அலுவலக செயல்பாடுகள் நேரலை வாயிலாக கண்காணிக்கப்படுகின்றன.
இருப்பினும், பெரும்பாலான சார் - பதிவாளர் அலுவலகங்களில், பத்திரப்பதிவுக்காக நேரடியாக வரும் பொது மக்கள், அங்குள்ள அலுவலர்கள், பணியாளர்களால் அலைக்கழிக்கப்படுகின்றனர். ஆவண எழுத்தர் வாயிலாக வந்தால் மட்டுமே பணிகள் நடக்கும் சூழல் நிலவுகிறது.
இந்நிலையில், சார் - பதிவாளர் அலுவலகங்களில் ஏற்படும் பிரச்னைகள் குறித்து புகார் அளிக்க, பதிவுத்துறை தலைமை அலுவலகத்தில், கட்டுப்பாட்டு அறை ஏற்படுத்தப்பட்டது.
மொபைல் போன் மற்றும் 'வாட்ஸாப்' வாயிலாக புகார் தெரிவிக்கலாம் என, அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து, பதிவுத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
கட்டுப்பாட்டு அறைக்கு தினமும், 200 புகார்கள் பதிவு செய்யப்படுகின்றன.
இதில் தொழில்நுட்ப பிரச்னை தொடர்பான புகார்கள், அதற்கான பிரிவு வாயிலாக உடனுக்குடன் சரிசெய்யப்படுகின்றன.
அதேநேரம், சார் - பதிவாளர்களின் செயல்பாடு தொடர்பான புகார்கள், மேலதிகாரிகள் விசாரணைக்கு அனுப்பப்படுகி ன்றன.
இந்த புகார்கள் தொடர்பாகவும், பொது மக்களிடம் ஏற்படும் அதிருப்தி குறித்தும், டி.ஐ.ஜி., மாவட்ட பதிவாளர் வாயிலாக விசாரித்து, சம்பந்தப்பட்ட சார் - பதிவாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

