ADDED : பிப் 27, 2026 06:26 AM

சென்னை: மருந்து உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விற்பனையகங்களில் நடந்த சோதனையில், 215 மருந்துகள் தரமற்றவை என்பதும், மூன்று மருந்துகள் போலி என்பதும் தெரியவந்துள்ளதாக, மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.
அனைத்து வகையான மருந்து, மாத்திரைகளும் மத்திய மற்றும் மாநில மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியங்கள் வாயிலாக ஆய்வு செய்யப்படுகின்றன. அதேபோல், போலி மருந்துகளும் கண்டறியப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
அதன்படி, கடந்த மாதத்தில் மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருந்து மாதிரிகள் ஆய்வுக்கு உட் படுத்தப்பட்டன. அவற்றில் காய்ச்சல், சளித் தொற்று, கிருமித் தொற்று, ஜீரண மண்டல பாதிப்பு உள்ளிட்டவற்றுக்கான, 215 மருந்துகள் தரமற்றவையாகவும், மூன்று மருந்துகள் போலியானதாகவும் இருந்தது கண்டறியப்பட்டது.
சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு விளக்கம் கேட்டு, 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் அந்நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. இந்த மருந்து விபரங்கள், மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியத்தின், https://cdsco.gov.in/ என்ற இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.
இவற்றை பொதுமக்கள் பார்த்து விழிப்புணர்வுடன் செயல்படலாம் என்று, மருந்து கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

