'2 ஆண்டுகளில் 25 லட்சம் பேர் நான் முதல்வன் திட்டத்தில் பயன்'
'2 ஆண்டுகளில் 25 லட்சம் பேர் நான் முதல்வன் திட்டத்தில் பயன்'
ADDED : பிப் 17, 2024 05:22 AM

சென்னை: ''நான் முதல்வன் திட்டத்தில், இரண்டு ஆண்டுகளில் மட்டும் 25 லட்சம் பேர் பயன் அடைந்துள்ளனர்,'' என, அமைச்சர் உதயநிதி கூறினார்.
சென்னை நந்தனம் மெட்ரோ தலைமை அலுவலகத்தின் எட்டாவது தளத்தில், 8.78 கோடி ரூபாயில், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் புதிய அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த அலுவலகத்தை, அமைச்சர் உதயநிதி நேற்று துவக்கி வைத்தார். நான் முதல்வன் திட்டம் வாயிலாக, திறன் பயிற்சி பெற்ற கல்லுாரி மாணவர்கள் 700 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். மேலும், 'ஸ்கவுட் திட்டம்' தொடர்பாக, பிரிட்டிஷ் கவுன்சிலுடன் புரிந்துணர்வு ஒப்பந்தமும், டெக் மகேந்திரா நிறுவனத்துடனும் ஒப்பந்தம் கையெழுத்தானது.
இதில், அமைச்சர் உதயநிதி பேசியதாவது: தமிழக மாணவர்களின் திறனை மேம்படுத்த, திறன் மேம்பாட்டு கழகம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. திறன் பயன்பாடு என்று, நான் முதல்வர் திட்டம் இன்று பரந்து விரிந்து செயல்பட்டு வருகிறது.
சர்வதேச திறன் போட்டியில் உலக அளவில் பங்கேற்று, தமிழகத்தைச் சேர்ந்த மூன்று போட்டியாளர்கள் பதக்கம் வென்று, மாநிலத்திற்கு பெரிய பெருமை சேர்த்துள்ளனர்.
கடந்த ஆண்டு, நான் முதல்வன் திட்ட வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்று, ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பணியில் சேர்ந்துள்ளனர். இந்த வாய்ப்பை, இந்தாண்டும் மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
நான் முதல்வன் திட்டம் துவங்கப்பட்ட இரண்டு ஆண்டுகளில், 25 லட்சம் பேர் பயன் பெற்றுள்ளனர். நம் அரசின் பிராண்ட் அம்பாசிடர்ஸ், அரசின் துாதர்கள் நீங்கள் தான். இவ்வாறு அவர் பேசினார்.