ADDED : ஜன 24, 2024 01:36 AM

அய்ஸ்வால், ஆயுதமேந்திய குழுவுக்கு பயந்து, மிசோரமுக்கு தப்பி வந்த, நம் அண்டை நாடான மியான்மரைச் சேர்ந்த, 276 ராணுவ வீரர்கள் மீண்டும் அந்நாட்டுக்கே திருப்பி அனுப்பப்பட்டனர்.
மியான்மரில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஆட்சியை ராணுவம் கைப்பற்றியது. இதற்கு ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து, ஆயுதங்களுடன் ராணுவத்தினருக்கு எதிராக சண்டையிட்டு வருகின்றனர். நம் நாட்டின் வட கிழக்கு மாநிலமான மிசோரம், மியான்மருடன் எல்லையை பகிர்ந்து கொண்டுள்ளது.
சர்வதேச எல்லையில், மியான்மர் ராணுவத்தினரின் முகாம்களை ஆயுதமேந்திய கும்பல் கைப்பற்றுவதால், அவர்களுக்கு பயந்து, அந்நாட்டு ராணுவ வீரர்கள் எல்லை வழியாக மிசோரமுக்குள் தப்பி வருகின்றனர்.
இதன்படி, எல்லையில் உள்ள மிசோரமின் லாங்ட்லாய் மாவட்டத்தின் பாண்டுக்பங்கா கிராமத்திற்கு, கடந்த 17ம் தேதி, 276 ராணுவ வீரர்கள் தப்பி வந்தனர். இவர்கள் அனைவரும், அசாம் ரைபிள்ஸ் படையினரின் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், லெங்புய் விமான நிலையத்தில் இருந்து, மியான்மரின் ராக்கைன் மாநிலத்துக்கு, அந்நாட்டின் விமானம் வாயிலாக, 276 வீரர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். இதுவரை மியான்மரில் இருந்து, 635 வீரர்கள் மிசோரமுக்கு தப்பி வந்துள்ளனர்.
மியான்மரில் இருந்து ஏராளமானோர் நம் நாட்டு எல்லைக்குள் ஊடுருவுவது, உள்நாட்டு பாதுகாப்புக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என எச்சரிக்கப்பட்டது.
இதையடுத்து, 'வங்கதேச எல்லையில் பாதுகாப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளது போல், மியான்மர் எல்லையிலும் அமைக்கப்படும்' என, சமீபத்தில் மத்திய அரசு அறிவித்திருந்தது.
இதற்கிடையே நேற்று, இது தொடர்பாக, நாகாலாந்து துணை முதல்வர் ஒய் பாட்டன் கூறுகையில், ''மியான்மருடனான சர்வதேச எல்லைக்கு வேலி அமைக்கும் மத்திய அரசின் முடிவு குறித்து, அந்நாட்டுடன் எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் பிற வட கிழக்கு மாநிலங்களுடன் நாகாலாந்து அரசு கலந்து ஆலோசிக்கும்.
''இதில் பேச்சு நடத்தி நல்ல முடிவு எடுக்கப்படும்,'' என்றார்.
இந்த நிலையில், மியான்மர் வீர்களை ஏற்றி செல்வதற்காக பைலட் உள்ளிட்ட 14 பேருடன், அந்த நாட்டு ராணுவ விமானம் நேற்று அய்ஸ்வால் அருகேயுள்ள லெங்புய் விமான நிலையம் வந்தது.
அப்போது ஓடுபாதையை விட்டு விலகி சென்ற விமானம் விபத்தில் சிக்கியது. இதில் விமானத்தில் இருந்த எட்டு பேர் காயம் அடைந்தனர்.

