திருநெல்வேலியில் 3 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை; குற்றவாளிக்கு மரண தண்டனை
திருநெல்வேலியில் 3 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை; குற்றவாளிக்கு மரண தண்டனை
UPDATED : மார் 12, 2026 02:40 PM
ADDED : மார் 12, 2026 01:35 PM

நமது நிருபர்
திருநெல்வேலியில்
3 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த குற்றவாளி ஆனந்த சேகருக்கு மரண
தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு அளித்து உத்தரவிட்டது.
திருநெல்வேலி
மாவட்டம், மேலப்பாளையம் குறிச்சி அருகே உள்ள அழகிரிபுரம் பகுதியை
சேர்ந்தவர் ஆனந்த் சேகர். 41 வயதான இவர் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து
வந்தார். இவருக்கு திருமணமாகி மூன்று வயதில் ஒரு குழந்தை உள்ளது. இவர்
கடந்த 2023ம் ஆண்டு 6, 7 மற்றும் 8 வயதுடைய மூன்று சிறுமிகளை மிரட்டி தனி
வீட்டிற்குள் அழைத்து சென்று ஒரே நேரத்தில் பாலியல் வன்கொடுமை செய்தார்.
இந்த
கொடூர சம்பவத்தை வெளியில் யாரிடமாவது சொன்னால் கொலை செய்து விடுவேன் என
அந்த சிறுமிகளை ஆனந்த் சேகர் கடுமையாக மிரட்டினார். இதனால் பயந்துபோன
சிறுமிகளின் அன்றாட நடவடிக்கைகளில் பெரும் மாற்றம் தெரிந்தது. இதை கவனித்த
பெற்றோர்கள் அவர்களிடம் அன்பாக விசாரித்தனர்.
அப்போது தங்களுக்கு
நேர்ந்த கொடூரத்தை சிறுமிகள் கண்ணீருடன் தெரிவித்தனர். இதை கேட்டு
அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள், பாளையங்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ்
நிலையத்தில் புகார் அளித்தனர்.
இந்த புகாரின் அடிப்படையில் போலீசார்
வழக்குப்பதிவு செய்து ஆனந்த் சேகரை உடனடியாக கைது செய்து சிறையில்
அடைத்தனர். இந்த வழக்கு நெல்லை மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில்
தொடர்ந்து நடந்து வந்தது. இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதி
சுரேஷ்குமார் இன்று (மார்ச் 12) தீர்ப்பு அளித்தார்.
அவர் தனது
தீர்ப்பில், இது சமூகத்தில் நடைபெறும் அரிதிலும் அரிதான வழக்கு என
சுட்டிக்காட்டினார். பிஞ்சு குழந்தைகளுக்கு கொடூரமான முறையில் பாலியல்
வன்கொடுமை செய்த ஆனந்த் சேகருக்கு மரண தண்டனை விதித்து உத்தரவிட்டார். மேலும் பாதிக்கப்பட்ட மூன்று சிறுமிகளுக்கும் அரசு சார்பில் தலா ஏழு லட்சம்
ரூபாய் இழப்பீடாக வழங்க வேண்டும் எனவும் நீதிபதி தனது தீர்ப்பில்
தெரிவித்தார்.

