ADDED : பிப் 16, 2026 01:28 AM

சென்னை: தமிழகத்தில், டெங்கு காய்ச்சலால் தினமும் 30க்கும் அதிகமானோர் பாதிக்கப்படும் நிலையில், தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்தும்படி மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தி உள்ளது.
டெங்கு காய்ச்சலை பரப்பும், 'ஏடிஸ் - எஜிப்டை' வகை கொசுக்கள், மழை மற்றும் குளிர் காலங்களில் அதிகம் பெருக்கமடைகின்றன.
பொதுவாக, ஆண்டு முழுதும் பரவலாக டெங்கு பாதிப்பு இருந்தாலும், ஆண்டின் இறுதி மாதங்கள் துவங்கி ஜனவரி வரை பாதிப்பு அதிகம் காணப்படும். அதன்படி, ஜனவரி மாதத்தில் மட்டும், 1,500க்கும் அதிகமானோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இந்நிலையில், டெங்கு பாதிப்பு இம்மாதமும் நீடித்து வருகிறது. கடந்த 15 நாட்களில், 500க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மாநிலம் முழுதும் தினமும், 30க்கும் அதிகமானோர் டெங்குவால் பாதிக்கப்படுவதால், தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்தும்படி, அனைத்து மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கும் பொது சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து, பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:
தமிழகத்தில் பல பகுதிகளில், பனிப்பொழிவு தீவிரமாக உள்ளது. அத்துடன் மழைப்பொழிவும் இருப்பதால், 'ஏடிஸ்' இனப்பெருக்கம், அதனால் பரவும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு தொடர்கிறது.
ஜனவரியுடன் ஒப்பிடுகையில், எண்ணிக்கை சற்று குறைந்திருந்தாலும் பாதிப்பு நீடிக்கிறது. எனவே, மாநிலம் முழுதும் உள்ள 23,000 கொசு ஒழிப்பு பணியாளர்கள் வாயிலாக, 'ஏடிஸ்' கொசு ஒழிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
டெங்கு உறுதி செய்யப்படும் பகுதிகளில், மருத்துவ முகாம் நடத்தவும், கொசு ஒழிப்பு பணிகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இதன் வாயிலாக, மற்றவர்களுக்கு டெங்கு பரவாமல் தடுக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

