'30,981 தொழில் முனைவோர் 2.5 ஆண்டுகளில் உருவாக்கம்': அமைச்சர் அன்பரசன்
'30,981 தொழில் முனைவோர் 2.5 ஆண்டுகளில் உருவாக்கம்': அமைச்சர் அன்பரசன்
ADDED : ஜன 09, 2024 12:44 AM

சென்னை: ''தமிழகத்தில் கடந்த இரண்டரை ஆண்டுகளில், 30,981 இளைஞர்கள், புதிய தொழில் முனைவோர்களாக உருவாக்கப்பட்டு உள்ளனர்,'' என, அமைச்சர் அன்பரசன் தெரிவித்தார்.
உலக முதலீட்டாளர் மாநாட்டில், வாங்குபவர் - விற்பனையாளர் சந்திப்பில், அமைச்சர் அன்பரசன் பேசியதாவது:
தி.மு.க., அரசு பொறுப்பேற்ற பின், இரண்டரை ஆண்டுகளில், 12,182 குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு, 824.40 கோடி ரூபாய் மானியம் வழங்கப்பட்டுள்ளது.
முன் மாதிரி திட்டம்
அனைத்து பிரிவு மக்களையும், தொழில் முனைவோர்களாக உருவாக்க, ஐந்து வகையான சுய தொழில் திட்டங்களை, முதல்வர் செயல்படுத்தி வருகிறார்.
ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து இதுவரை, 1,099.86 கோடி ரூபாய் மானியத்துடன், 3,890.59 கோடி ரூபாய் கடனுதவி வழங்கப்பட்டு, 30,981 இளைஞர்கள் புதிய தொழில் முனைவோர்களாக உருவாக்கப்பட்டுள்ளனர்.
முதல்வரின் முன்மாதிரி திட்டங்களால், 'ஸ்டார்ட் அப்' தர வரிசையில், இந்திய அளவில் கடைசி இடத்திலிருந்த தமிழகம், தற்போது மூன்றாம் நிலைக்கு முன்னேறி, 'லீடர்' தகுதியை பெற்றுள்ளது.
மாணவர்கள், இளைஞர்கள், படிக்கும் காலத்திலேயே, தொழில் முனைவோர்களாக உருவாக, பள்ளி மற்றும் கல்லுாரிகளில், தொழில் முனைவோர் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதுவரை 8.98 லட்சம் இளைஞர்கள் மற்றும் மாணவர்களுக்கு, தொழில் முனைவோர் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
நிதியுதவி
கடந்த இரண்டு ஆண்டுகளில், 266 புதிய கண்டுபிடிப்பாளர்களுக்கு, 7.39 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கி ஊக்கப்படுத்தி உள்ளது.
மேலும், 324.66 கோடி ரூபாய் மதிப்பில், 519 ஏக்கர் பரப்பளவில், எட்டு தொழிற்பேட்டைகள் புதிதாக துவக்கப்பட்டு உள்ளன. இதுதவிர, எட்டு தொழிற்பேட்டைகளை, 325.64 ஏக்கர் பரப்பளவில் அமைக்க, பணிகள் நடந்து வருகின்றன.
குறுந்தொழில் நிறுவனங்களின் மூலதன செலவை குறைக்கவும், உடனடியாக தொழில் துவங்கவும், கிண்டி, அம்பத்துார், சேலம் ஆகிய இடங்களில், 175.18 கோடி ரூபாய் மதிப்பில், 264 தொழில் கூடங்கள் கொண்ட, புதிய அடுக்குமாடி தொழில் வளாகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. முதல்வர் விரைவில் திறந்து வைக்க உள்ளார்.
தொழிலாளர்கள் தங்குவதற்கு, அம்பத்துார், கோவை குறிச்சி தொழிற்பேட்டைகளில், 51.47 கோடி ரூபாயில் தங்கும் விடுதிகள் கட்டப்பட்டுள்ளன.
அவை விரைவில் திறக்கப்பட உள்ளன. தேசிய ஏற்றுமதி வளர்ச்சியுடன் ஒப்பிடுகையில், தமிழகத்தில் ஆண்டுக்கு 16 சதவீதம் ஏற்றுமதி அதிகரித்துள்ளது.
இவ்வாறு அமைச்சர் பேசினார்.