ADDED : பிப் 20, 2026 03:52 AM
சென்னை: அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு, ஓட்டுநருடன் நடத்துநர் பணிக்கு தேர்வான 3,200 பேருக்கு, ஓரிரு நாளில் பணி நியமன ஆணை வழங்கப்பட உள்ளது.
தமிழக அரசு போக்குவரத்து கழகங்களில், ஓட்டுநர், நடத்துநர் உட்பட பல்வேறு பிரிவுகளில், மொத்தம் 8,000க்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன.
போதிய அளவில் ஓட்டுநர், நடத்துநர்கள் இல்லாத நிலையில், தற்காலிக பணியாளர்களை நியமித்து, அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், 3,200 பணியிடங்களுக்கு, 'டிஎன்சி' எனப்படும் ஓட்டுனருடன் கூடிய நடத்துனர் பணிக்கு, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இப்பணிக்கு விண்ணப்பித்து, ஓட்டுநர் மற்றும் நடத்துநர் உரிமம் வைத்திருந்தவர்களுக்கு, தேர்வுகள் நடத்தப்பட்டன.
அனைத்து தேர்வுகள் முடிந்து, சான்றிதழ்கள் சரிபார்ப்பு பணிகளும் முடிந்துள்ளன.
இதையடுத்து, தேர்வு செய்யப்பட்ட 3,200 பேருக்கு, ஓரிரு நாளில் பணி நியமன ஆணை வழங்கப்பட உள்ளது என, அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

