"அடுத்த தலைமுறையை அழிக்க தி.மு.க, முயற்சி": எச்.ராஜா குற்றச்சாட்டு
"அடுத்த தலைமுறையை அழிக்க தி.மு.க, முயற்சி": எச்.ராஜா குற்றச்சாட்டு
ADDED : மார் 17, 2024 12:58 PM

ஈரோடு: 'அடுத்த தலைமுறையை அழிக்கும் முயற்சியில் கருணாநிதியின் குடும்பம், தி.மு.க, செயல்பட்டு கொண்டு இருக்கிறது' என பா.ஜ, மூத்த தலைவர் எச்.ராஜா குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து எச்.ராஜா நிருபர்களுக்கு அளித்த பேட்டி: பிரதமர் கடந்த மூன்று ஆண்டுகளில் பலமுறை தமிழகம் வந்துள்ளார். பிரதமர் மட்டும் தான் தேர்தலுக்காக வருகிறாரா, திமுக உள்ளிட்ட கட்சிகள் மக்களிடம் போகவில்லையா?. ஜாபர் சாதிக் கடந்த 2006ம் ஆண்டு கடத்தல் வழக்கில் கைதானவர் என்பது திமுகவுக்கு தெரியாதா?. அடுத்த தலைமுறையை அழிக்கும் முயற்சியில் கருணாநிதியின் குடும்பம், தி.மு.க, செயல்பட்டு கொண்டு இருக்கிறது.
முதன் முதலில் குடின்னா என்ன என்று தெரியாமல் இருந்த தமிழனை, 1970ம் ஆண்டு ஆகஸ்ட் 31ம் தேதி கள்ளு கடையை திறந்து விட்டு தமிழனை குடிக்க வைச்சு, கருணாநிதி குடும்பம் குடியை கெடுத்தது. மாநில தலைவர் அண்ணாமலை மீது அவதூறு வழக்கு போடப்பட்டுள்ளது. உண்மையை பேசினால் எப்படி அவதூறு ஆகும். அடுத்த தலைமுறையை பற்றி பெற்றோர்கள் கவலைப்படும் வகையில், போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளது.
வரும் லோக்சபா தேர்தலில் மக்களிடம் புதிதாக வித்தைகள் காட்ட முதல்வர் ஸ்டாலின் களம் இறங்கி உள்ளார். ஆனால் மக்கள் திமுக வித்தைகளை நம்ப மாட்டார்கள். ஸ்டாலின் வித்தைகளெல்லாம் எடுபடாது. வரும் லோக்சபா தேர்தல் என்பது வளர்ச்சிக்கான தேர்தல். ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் யாராலும் குளறுபடிகள் செய்ய முடியாது. இதனை தேர்தல் கமிஷன் தெளிவுப்படுத்தி உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

