"வேலைவாய்ப்பு இல்லாததால் கள்ளச்சாராயம் காய்ச்சுகின்றனர்": உயர்நீதிமன்றம் அதிருப்தி
"வேலைவாய்ப்பு இல்லாததால் கள்ளச்சாராயம் காய்ச்சுகின்றனர்": உயர்நீதிமன்றம் அதிருப்தி
ADDED : ஜூலை 01, 2024 11:28 AM

சென்னை: 'கள்ளக்குறிச்சி கல்வராயன் மலையில் வசிக்கும் மக்களுக்கு வேலைவாய்ப்பு இல்லாததால், கள்ளச்சாராயம் காய்ச்சும் நிலை ஏற்பட்டுள்ளது' என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், கள்ளச்சாராயம் குடித்து தற்போது வரை 65 பேர் உயிரிழந்துள்ளனர். இது தொடர்பாக, 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து, சி.பி.சி.ஐ.டி., விசாரணையும், ஓய்வுபெற்ற நீதிபதி கோகுல்தாஸ் தலைமையிலான ஒரு நபர் கமிஷனும் விசாரணை நடத்தி வருகிறது.
இந்நிலையில், கள்ளச்சாராய மரண வழக்கு தொடர்பாக, இன்று (ஜூலை 01) சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தியது. அப்போது உயர்நீதிமன்ற நீதிபதிகள் கூறியதாவது: கள்ளக்குறிச்சி கல்வராயன்மலையில் வசிக்கும் மக்களுக்கு வேலைவாய்ப்பு இல்லாததால் கள்ளச்சாராயம் காய்ச்சும் நிலை ஏற்பட்டுள்ளது.
உத்தரவு
அப்பகுதி மக்களின் சமூக, பொருளாதார சூழலை கருத்தில் கொண்டு தலையிட்டோம். இவ்வாறு உயர்நீதிமன்ற நீதிபதிகள் கூறினர். இது தொடர்பாக, தலைமைச் செயலாளர், டி.ஜி.பி, மத்திய, மாநில பழங்குடியின நலத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் பதில் அளிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.