ADDED : பிப் 26, 2024 03:42 PM

சென்னை: ‛‛ ரயில்வே, நெடுஞ்சாலைகள், விமான நிலையங்கள், துறைமுகங்கள், வீட்டுவசதி போன்ற துறைகளில் முன்னெப்போதும் இல்லாத வளர்ச்சியைக் கண்டு வருகிறது'' என தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் எக்ஸ் சமூகவலைதளத்தில் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: அம்ரித் பாரத் நிலைய திட்டத்தின் கீழ், ரயில் கட்டமைப்புகளில் வரலாற்றுச் சிறப்புமிக்க மாற்றத்துக்கு வழிவகுத்து, தமிழகத்தில் உள்ள 34 ரயில் நிலையங்களை மேம்படுத்த அடிக்கல் நாட்டியதற்காக பிரதமர் மோடிக்கு தமிழக மக்களின் சார்பில் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அதிநவீன உள்கட்டமைப்பு மற்றும் உலகத் தரம் வாய்ந்த பொது வசதிகள் தமிழகத்தின் சகோதர சகோதரிகளுக்கு அதிக இணைப்பு, வசதி மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும். தொலைநோக்கு தலைமையின் கீழ், ரயில்வே, நெடுஞ்சாலைகள், விமான நிலையங்கள், துறைமுகங்கள், வீட்டுவசதி போன்ற துறைகளில் முன்னெப்போதும் இல்லாத வளர்ச்சியைக் கண்டு வருகிறது. தற்போதைய திட்டங்கள் ரூ. 45,769 கோடிக்கு மேல் உள்ளதால், மாநிலம் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எட்ட ஆயத்தமாக உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கவர்னர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார்.

