கனமழை எச்சரிக்கை: அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்
கனமழை எச்சரிக்கை: அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்
UPDATED : அக் 15, 2024 07:13 AM
ADDED : அக் 14, 2024 01:38 PM

சென்னை: திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு,கடலுார் மற்றும் விழுப்புரம்(பள்ளி மட்டும்) 6 மாவட்டங்களில் இன்று(அக்.,15) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இது குறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இன்று (அக்.,15) முதல் அக்டோபர் 18ம் தேதி வரை ஐ.டி.,நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை வீட்டில் இருந்து பணிபுரிய அறிவுறுத்த வேண்டும். வெள்ளத்தால் பாதிக்க கூடிய பகுதிகளில் மீட்பு படகுகளை இன்றே நிறுத்த வேண்டும். மக்களின் வசதிக்காக மெட்ரோ ரயில், பறக்கும் ரயில் சேவைகளை அதிகரிக்க வேண்டும்.
தங்குதடையின்றி, ஆவின் நிறுவனம் மூலம் பால் விநியோகத்தை உறுதி செய்ய வேண்டும். முதியோர், ஆதரவற்றோர் இல்லங்களில் போதுமான உணவுப்பொருட்களை இருப்பு வைக்க வேண்டும். கனமழை எச்சரிக்கை இருப்பதால், பொதுமக்கள் சுற்றுலா தலங்கள், நீர்நிலைகளுக்கு செல்ல வேண்டாம். நிவாரண முகாம்களை தயாராக வைக்க வேண்டும். மக்களை முன்கூட்டியே தங்க வைக்க வேண்டும். முக்கிய பொருட்கள் மற்றும் ஆவணங்களை தண்ணீர் புகா வண்ணம் பாதுகாப்பாக வைக்க வேண்டும்.
தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் நிவாரண முகாம்களுக்கு செல்ல வேண்டும். ரொட்டி, தண்ணீர் பாட்டில்களை இன்றே நிவாரண முகாம்களில் இருப்பு வைக்க வேண்டும். சாலைப்பணிகள் நடக்கும் இடங்களில் ஒளிரும் பட்டைகள், பாதுகாப்பு தடுப்புகள் அமைக்க வேண்டும். மழையளவு, அணைகளின் நீர்வரத்தை கண்காணித்து நீர் மேலாண்மை செய்ய வேண்டும். மின் உற்பத்தி, மின் விநியோகம் சீராக இருக்க கட்டுப்பாட்டு மையத்தில் கூடுதல் பணியாளர்களை உறுதி செய்ய வேண்டும்.
கார், பைக் வைத்திருப்போர்கள் கனமழைக்கான திட்டமிடுதல், முன்னேற்பாடுகளை செய்ய வேண்டும். விவசாயிகள், மீனவர்கள், விடுதிகளில் தங்கியிருப்போர் முன்னேற்பாடுகளை செய்ய வேண்டும்.
அறுந்து கிடக்கும் மின் கம்பிகளில் இருந்து விலகி இருக்க வேண்டும். கர்ப்பிணிகள், நோயாளிகள், முதியவர்களுக்கு தேவையான முன்னேற்பாடுகளை செய்ய வேண்டும். மழை தொடர்பாக சமூக வலைதளங்களில் பரப்பும் வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம். அரசு அலுவலர்கள் அளிக்கும் முன்னெச்சரிக்கைப்படி மக்கள் நடந்து கொள்ள வேண்டும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
4 மாவட்டங்களுக்கு விடுமுறை
திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் இன்று(அக்.,15) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
ஒர்க் ப்ரம் ஹோம்
மழை காரணமாக ஐ.டி., நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை இன்று (அக்.15) முதல் 18 ம் தேதி வரை வீட்டில் இருந்து பணிபுரிய அறிவுறுத்த வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.
கவுன்சிலிங் ஒத்திவைப்பு
சென்னை, லேடி வில்லிங்டன் கல்லூரியில் இன்று நடைபெற இருந்த பி.எட். கவுன்சிலிங் 21ம் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பி.எட்.,( தாவரவியல், விலங்கியல், வேதியியியல், இயற்பியல் சேர்க்கைக்கான கவுன்சிலிங் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.
செயலி அறிமுகம்
வடகிழக்கு பருவமழை பாதிப்பு குறித்து அறிய 1913 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், TN-ALERT என்ற மொபைல் செயலி மூலம் மழை குறித்தான அறிவிப்புகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம் எனவும் கூறப்பட்டு உள்ளது.
மின்வாரியம் நடவடிக்கை
பருவமழையின் போது மின்சாரம் தொடர்பான பிரச்னைகளை மின்னகம் வாயிலாக புகார் அளிக்கலாம். சமூக வலைதளம் மூலம் புகார் அளிப்பவர்கள், இணைப்பு எண்ணுடன் பதிவிட்டால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், 31 துணை மின் நிலையங்களில் தண்ணீர் புகாதவாறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது என மின்வாரியம் கூறியுள்ளது.
வனத்துறை அறிவிப்பு
மழையின் போது வீட்டிற்குள் வரும் பாம்புகள் உள்ளிட்ட விஷ ஜந்துகளை பிடிக்க 044 22200335 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என கிண்டி வனத்துறை அறிவித்துள்ளது.
சென்னை மாநகராட்சி உத்தரவு
சென்னையில் 180 வெள்ள அபாய பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்தி கண்காணிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ள மாநகராட்சி உத்தரவிட்டு உள்ளது. 43 இடங்களில் மழைநீர் வடிகால் இணைப்பு பணிகள் முழுமை பெறாமல் உள்ளதாக தெரிவித்துள்ள அதிகாரிகள், அப்பணிகளை விரைந்து முடிக்கவும் உத்தரவிட்டு உள்ளனர்.