வேலூர் மாவட்டத்தில் மூன்று விபத்துக்களில் 4 பேர் பரிதாப பலி
வேலூர் மாவட்டத்தில் மூன்று விபத்துக்களில் 4 பேர் பரிதாப பலி
ADDED : ஜூலை 13, 2011 01:43 AM
வேலூர்: வேலூர் மாவட்டத்தில், நேற்று வெவ்வேறு இடங்களில் நடந்த, 3 விபத்தில், 4 பேர் பரிதாபமாக இறந்தனர்.
வேலூர் அடுத்த ஆம்பூர் அடுத்த மேல்கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த சேர்ந்த குப்பன், அவரது மனைவி பொன்னி ஆகியோர், அதே பகுதியை சேர்ந்த தரணி (42) என்பவரின் ஆட்டோவில், கொல்ல குப்பத்தில் நடந்த உறவினர் வீட்டு விசேஷத்திற்கு நேற்று காலை, 10 மணிக்கு சென்றனர்.
மாதனூர் அருகே, நொண்டி குப்பம் நான்கு வழி சாலையில் ஆட்டோ சென்ற போது, முன்னால் சென்ற கன்டெய்னர் லாரி திடீரென பிரேக் போட்டு நின்றது. தரணி ஆட்டோவை நிறுத்த முயன்றார். முடியாததால் லாரியின் பின்னால் பயங்கரமாக ஆட்டோ மோதியது. இதில் தரணி, பொன்னி (24) ஆகியோர் சம்பவ இடத்தில் உடல் நசுங்கி இறந்தனர். ஆம்பூர் தாலுகா போலீஸார் விசாரிக்கின்றனர்.
* நாட்றாம்பள்ளியை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி (27). இவரது நண்பர் விஜயன் (31). இவர்கள் இருவரும், நேற்று காலை, 6 மணிக்கு பைக்கில் பர்கூர் சென்று விட்டு, வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். பங்களா மேடு நான்கு வழி சாலையில், முன்னால் சென்ற மினி லாரி மீது பைக் மோதியது. இதில், சத்தியமூர்த்தி பரிதாபமாக இறந்தார். நாட்டறாம்பள்ளி போலீஸார் விசாரிக்கின்றனர்.
* திருப்பத்தூர் அடுத்த தோக்கியம் புளியந்தோப்பை சேர்ந்தவர் ராஜசேகர் (27). திருப்பூரில் ஸ்வீட் கடையில் பணிபுரிந்து வந்த அவர், உறவினர் வீட்டு கிரகப்பிரவேஷத்தில் கலந்து கொள்ள, இரு நாட்களுக்கு முன், தோக்கியம் வந்தார். பைக்கில் கெஜல்நாயக்கன்பட்டிக்கு சென்று விட்டு, நேற்று காலை, 11 மணிக்கு தோக்கியம் நோக்கி திரும்பி வரும் போது, செல்லியம்மன் கோவில் அருகே தாயப்பன் நகரை சேர்ந்த முரளி என்பவர் ஓட்டி வந்த பைக் மீது, ராஜசேகர் பை மோதியது. இதில், ராஜசேகர் பரிதாபமாக இறந்தார். கந்திலி போலீஸார் விசாரிக்கின்றனர்.