42,000 பேர் பங்கேற்ற 'பட்டம்' வினாடி - வினா விருது போட்டி
42,000 பேர் பங்கேற்ற 'பட்டம்' வினாடி - வினா விருது போட்டி
UPDATED : பிப் 04, 2024 08:11 AM
ADDED : பிப் 04, 2024 01:55 AM

சென்னை: 'தினமலர்' நாளிதழின் பட்டம் மாணவர் பதிப்பு சார்பில் நடந்த, வினாடி - வினா விருது இறுதி போட்டியில், சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் இருந்து, 140 பள்ளி மாணவ - மாணவியர் உற்சாகமாக பங்கேற்று பரிசுகள் பெற்றனர்.
'தினமலர்' நாளிதழின், மாணவர் பதிப்பான பட்டம் இதழ் சார்பில், ஆண்டுதோறும் வினாடி - வினா விருது போட்டி நடத்தப்படுகிறது. மாநிலம் முழுதும் பல்வேறு மண்டலங்களில், நடப்பாண்டு போட்டிகள் நடத்தப்படுகின்றன.
![]() |
140 பள்ளிகள்
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட பள்ளி மாணவ - மாணவியருக்கு, சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி நிறுவனத்துடன் இணைந்து, பட்டம் வினாடி - வினா போட்டி, கடந்த அக்டோபரில் துவங்கி ஜனவரி வரை நடந்தது.
மொத்தம், 140 அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், பள்ளி வாரியாக போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், 42,000த்துக்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர், 2 பேர் கொண்ட அணிகளாக பங்கேற்றனர்.
அவர்களில் ஒவ்வொரு பள்ளியிலும், முதல் பரிசு பெற்ற, 140 அணிகள் தேர்வு செய்யப்பட்டு, வினாடி - வினா இறுதி போட்டி, சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று பிரமாண்டமாக நடந்தது.
ஐந்து சுற்றுகள்
இறுதி போட்டி, ஆறு சுற்றுகளாக நடந்தது. முதல் சுற்றில், 140 அணிகள் பங்கேற்றன. அதில், முன்னிலை மதிப்பெண் பெற்ற, 8 அணிகள் தேர்வு செய்யப்பட்டு, இறுதியாக ஐந்து சுற்றுகள் நடந்தன.
ஆரம்பம் முதலே மிகவும் விறுவிறுப்புடனும், மாணவர்களின் உற்சாகம் மற்றும் கரகோஷத்துடன் போட்டி நடந்தது. எக்ஸ் குயிஸ் நிறுவனத்தை சேர்ந்த ஷ்ரவன் போட்டியை, விறுவிறுப்பாக நடத்தினார்.
குயிஸ் மாஸ்டர் அர்விந்த் மற்றும், 'தினமலர்' நாளிதழின் குழுவினர் ஒருங்கிணைத்தனர். வரலாறு, அறிவியல், பொது அறிவு, தமிழ் இலக்கியம், தொழில்நுட்பம் என, அனைத்து பகுதிகளையும் உள்ளடக்கிய வகையில், கேள்விகள் இடம் பெற்றன.
போட்டியில் வெறும் கேள்விகள் மட்டுமின்றி, கேள்விகள் தொடர்பான படங்கள், வீடியோக்கள்டிஜிட்டல் திரையில் காட்டப்பட்டதால், மாணவர்கள் மிகவும் ஆரவாரத்துடன் பங்கேற்றனர்.
ஒவ்வொரு சுற்றின் நிறைவிலும் கணினி வழி மதிப்பீட்டில், உடனுக்குடன் மதிப்பெண் பட்டியல் வெளியிடப்பட்டது.
![]() |
பரிசளிப்பு விழா
இறுதி சுற்றின் முடிவில், செங்கல்பட்டு மாவட்டம், ஊரப்பாக்கம் ஸ்ரீசங்கர வித்யாலயா பள்ளியை சேர்ந்த, 9ம் வகுப்பு மாணவி ம.கவின் மதி மற்றும் 8ம் வகுப்பு மாணவி ர.தேவஸ்ரீ ஆகியோர், அதிக கேள்விகளுக்கு சரியான பதில் அளித்து முதல் பரிசான, நாசாவுக்கு இலவச சுற்றுலா செல்லும் வாய்ப்பை பெற்றனர்.
முதல் எட்டு இடங்களை பிடித்த அணிகளுக்கும், அவர்களை தொடர்ந்து, முதல், 25 இடங்களை பிடித்த, அணிகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
இறுதி சுற்றுக்கு முன்னேறிய அணிகளை தவிர, மற்ற மாணவ, மாணவியருக்கும், கேள்விகள் கேட்கப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.
பரிசளிப்பு விழாவில், தலைமை விருந்தினராக சென்னை ஐ.ஐ.டி., இயக்குனர் காமகோடி, முதன்மை விருந்தினர்களாக சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி நிறுவன தலைவர் பி.ஸ்ரீராம் மற்றும் நாகா புட்ஸ் நிறுவன வர்த்தக பிரிவு மேலாளர் வீரையன் ஆகியோர், முதல் எட்டு இடங்களை பெற்ற அணியினருக்கு பரிசுகளையும், வெற்றி பெற்ற பள்ளிக்கு கோப்பைகளையும் வழங்கினர்.
'தினமலர்' நாளிதழின் இணை இயக்குனர்கள் ஆர்.லட்சுமிபதி, ஆர்.சீனிவாசன் ஆகியோர், விழாவின் விருந்தினர்களை கவுரவித்து, போட்டியில் பரிசு பெற்ற மாணவ - மாணவியர் மற்றும் ஆசிரியர்களுக்கு பாராட்டு தெரிவித்தனர்.
நாசா செல்லும் மாணவியர்
முதல் இடம் பெற்ற அணிக்கு, அமெரிக்காவின் நாசா செல்வதற்கான இலவச வாய்ப்பு வழங்கப்படுகிறது. 2ம் இடம் பெற்ற அணிக்கு லேப்டாப்; 3ம் இடம் பெற்ற அணிக்கு, டேப்லெட் கையடக்க கணினி பரிசாக வழங்கப்பட்டது.
மற்ற அணிகளுக்கும், பொதுவான கேள்விகளுக்கு பதில் அளித்தவர்களுக்கும், 'ஸ்மார்ட் வாட்ச்' உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன.
விழாவுக்கு வந்த, அனைத்து மாணவ -- மாணவியர், பெற்றோர் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும், காலை மற்றும் மதியம் உணவும், தேனீரும் கொடுத்து உபசரிக்கப்பட்டனர்.
முன்னதாக 'பட்டம்' மாணவர் பதிப்பின் பொறுப்பாசிரியர் வெங்கடேஷ், மாணவர்களின் ஆர்வத்தை பாராட்டி, பட்டம் இதழ் குறித்தும், வினாடி - வினா போட்டி நடத்துவது குறித்த நோக்கங்கள் குறித்தும்,மாணவர்களிடம் விவரித்தார்.