ஈரோடு இடைத்தேர்தலில் 46 பேர் போட்டி; கடைசி நேரத்தில் வெளி மாநில பெண் பெயர் நீக்கம்
ஈரோடு இடைத்தேர்தலில் 46 பேர் போட்டி; கடைசி நேரத்தில் வெளி மாநில பெண் பெயர் நீக்கம்
UPDATED : ஜன 21, 2025 08:02 AM
ADDED : ஜன 21, 2025 07:47 AM

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடை த்தேர்தலில் தி.மு.க., வேட்பாளர் வி.சி.சந்திரகுமார், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீதாலட்சுமி உட்பட 46 பேர் போட்டியில் உள்ளனர். கடைசி நேரத்தில், வேட்பாளர் பட்டியலில் இருந்த வெளிமாநில பெண் பெயர் நீக்கப்பட்டது.
ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.,வாக இருந்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் டிசம்பர் 14ல் உடல்நலக் குறைவால் காலமானார். இதனால் காலியானதாக அறிவிக்கப்பட்ட ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதியில் பிப்ரவரி 5ல் இடைத்தேர்தல் நடக்கிறது. பிப்ரவரி 8ம் தேதி ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த, ஜனவரி 10ம் தேதி தொடங்கி 17ம் தேதி முடிந்தது.
இந்த தேர்தலில் அ.தி.மு.க., பா.ஜ., தே.மு.தி.க, த.வெ.க., கட்சிகள் போட்டியிடாமல் புறக்கணித்துள்ளன. இதனால் தி.மு.க., சார்பில் சந்திரகுமார், நாம் தமிழர் சார்பில் சீதாலட்சுமி ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர். இவர்களுடன் சுயேட்சைகளும் சேர்த்து மொத்தம் 58 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
வேட்பு மனு வாபஸ் பெறும் காலக்கெடு நேற்று (ஜன.20) பிற்பகல் 3 மணியுடன் முடிந்தது. 8 சுயேட்சை வேட்பாளர்கள் தங்கள் மனுக்களை வாபஸ் பெற்றுள்ளனர். இதையடுத்து, தேர்தல் களத்தில் தி.மு.க., வேட்பாளர் சந்திரகுமார், நாம் தமிழர் வேட்பாளர் சீதாலட்சுமி உள்பட மொத்தம் 47 பேர் வேட்பாளர்களாக களத்தில் இருந்தனர்.
இந்நிலையில், இறுதி வேட்பாளர் பட்டியலில் இருந்த, பெங்களூருவைச் சேர்ந்த பத்மாவதி பெயர் நீக்கம் செய்யப்பட்டது. வெளிமாநில பெண் தேர்தலில் போட்டியிடுவதற்கு, சுயேச்சை வேட்பாளர்கள் ஆட்சேபனை தெரிவித்தனர்.
வேட்பு மனு வாபஸ் பெறும் நாள் முடிவடைந்த நிலையில், சுயேச்சை வேட்பாளர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், வேட்பு மனு மறுபரிசீலனை செய்யப்பட்டது. பின்னர், அவரது பெயர் வேட்பாளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது. இதனால் இறுதி வேட்பாளர்கள் எண்ணிக்கை 46 ஆகக் குறைந்தது.