500 கிலோ தங்கம் மோசடி விசாரணை மந்தம் பாதிக்கப்பட்டவர்கள் முற்றுகை போராட்டம்
500 கிலோ தங்கம் மோசடி விசாரணை மந்தம் பாதிக்கப்பட்டவர்கள் முற்றுகை போராட்டம்
ADDED : ஜன 30, 2024 12:28 AM
சென்னை: 'கிலோ கணக்கில் நகைகளை மோசடி செய்த, 'ரூபி ராயல் ஜுவல்லர்ஸ் அண்டு பேங்கர்ஸ்' நிறுவனத்தின் உரிமையாளர்கள் மீது விரைந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும்' என, பாதிக்கப்பட்டவர்கள் பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தைமுற்றுகையிட்டனர்.
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் சையது ரகுமான். இவரது சகோதரர் அன்சூர் ரகுமான். இவர்களுக்கு வேலுார் மாவட்டம், ஆம்பூரில் வீடு உள்ளது.
இவர்கள், சென்னை மேற்கு மாம்பலம் ஈஸ்வரன் கோவில் தெருவில், ரூபி ராயல் ஜுவல்லர்ஸ் அண்ட் பேங்கர்ஸ் எனும் நிறுவனத்தை நடத்தி வந்தனர்.
சில ஆண்டுகளுக்கு முன், முஸ்லிம்களுக்கு மட்டும் வட்டியில்லா நகைக் கடன் வழங்கப்படும் என அறிவித்தனர். இவர்களை நம்பி, சென்னை மண்ணடி உட்பட தமிழகத்தின் பல பகுதிகளைச் சேர்ந்த, 3,380க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள், 500 கிலோ வரை தங்க நகைகளை அடமானம் வைத்தனர்.
பெருத்த நஷ்டம்
இந்நிலையில், 2019ல், நகை கடன் வழங்கியதில் பெருத்த நஷ்டம் ஏற்பட்டுவிட்டது. நிறுவனம் திவாலாகிவிட்டது என, சையது ரகுமான் அறிவித்தார். அந்த நிறுவனத்திற்கும் 'சீல்' வைக்கப்பட்டது.
இதனால், பாதிக்கப்பட்டவர்கள் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.
மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரித்தனர். பின், இந்த வழக்கு பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரின் விசாரணைக்கு மாற்றப்பட்டது.
விசாரணையில், நிறுவனம் திவாலாகவில்லை என்றும், முஸ்லிம்களிடம் பெற்ற நகைகளை தனியார் வங்கி மற்றும் நிதி நிறுவனத்தில் கூடுதல் பணத்திற்கு அடமானம் வைத்துள்ளனர் என்றும், 43 இடங்களில் சொத்து வாங்கி இருப்பதும் தெரியவந்தது.
இதையடுத்து, 50 கோடி ரூபாயுடன் தலைமறைவான சையது ரகுமான், அன்சூர் ரகுமான் மற்றும் அந்த நிறுவனத்தின் ஊழியர்கள் ரிஹானா, ஷஜிதா, ஷகினா ஆகியோர் கைது செய்து புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். பின், ஜாமினில் வெளியே வந்துவிட்டனர்.
எனினும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நகை திரும்பக் கிடைக்க, பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், எவ்வித முயற்சியும் எடுக்கவில்லை. விசாரணை மந்த கதியில் நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.
சமரச பேச்சு
இந்நிலையில், பாதிக்கப்பட்ட 90 பேர், சென்னை அசோக் நகரில் உள்ள, பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டனர். நடவடிக்கையை தீவிரப்படுத்துவதாக, இவர்களிடம் போலீசார், சமரச பேச்சு நடத்தினர்.
பாதிக்கப்பட்டவர்கள் கூறுகையில், 'போலீசாரின் நடவடிக்கை எங்களுக்கு திருப்தியாக இல்லை. மோசடி செய்த நபர்கள் சொத்து வாங்கிக் குவித்து சொகுசாக வாழ்கின்றனர். நாங்கள் நகைகளை இழந்து தவிக்கிறோம்.
'கைதான நபர்கள் மீது போலீசார் குற்றப்பத்திரிகை கூட தாக்கல் செய்யாமல் உள்ளனர். வழக்கு விசாரணையை தீவிரப்படுத்தி எங்கள் நகைகளை பெற்றுத்தர வேண்டும்' என்றனர்.