ADDED : மார் 08, 2024 01:54 AM
சென்னை:தமிழக மின் வாரியம், மின் கட்டணத்தை எங்கிருந்தபடியும், எப்போது வேண்டுமானாலும் செலுத்த, 'TANGEDCO' மொபைல் செயலியை, 2018ல் அறிமுகம் செய்தது. அந்த செயலியை, 'கூகுள் பிளே ஸ்டோரில்' 15,500 பேர் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி வந்தனர்.
இந்நிலையில், இந்த மொபைல் செயலியில், 'கம்ப்ளயின்ட்' எனப்படும், மின்சாரம் தொடர்பான புகார்களை தெரிவிக்கும் வசதி, கடந்த மாதம், 12ம் தேதி ஏற்படுத்தப்பட்டது.
அதில், மின்தடை, மீட்டர் பழுது, மின்கட்டணம், மின்னழுத்த பிரச்னை, சேதமடைந்த மின்கம்பம், மின் திருட்டு, தீ விபத்து, மின் கம்பி அறுந்தது தொடர்பான புகார்களை அளிக்கலாம்.
மொபைல் செயலியில் அளிக்கப்படும் புகார் மீது, விரைந்து தீர்வு காணப்படுகிறது. அதனால், தற்போது, செயலியை பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
செயலியை அறிமுகம் செய்ததில் இருந்து, இம்மாதம் 2ம் தேதி வரை, அதை பதிவிறக்கம் செய்து பயன்படுத்துவோர் எண்ணிக்கை, 51,629 ஆக அதிகரித்துள்ளது.

