மின் கட்டண உயர்வால் அரசுக்கு கூடுதலாக ரூ.520 கோடி செலவு
மின் கட்டண உயர்வால் அரசுக்கு கூடுதலாக ரூ.520 கோடி செலவு
ADDED : ஆக 15, 2024 06:33 AM

சென்னை : தமிழக மின் வாரியம், அனைத்து வீடுகளுக்கும், 100 யூனிட் இலவசமாகவும், விவசாயம் மற்றும் குடிசை வீடுகளுக்கு முழுதும் இலவசமாகவும் மின் வினியோகம் செய்கிறது. மேலும், விசைத்தறி, வழிபாட்டு தலங்களுக்கு மானிய விலையில் மின்சாரம் வழங்கப்படுகிறது.
இதற்காக மின் வாரியத்திற்கு ஏற்படும் செலவை, தமிழக அரசு மானியமாக வழங்குகிறது. இந்த நிதியாண்டிற்கு, 15,332 கோடி ரூபாய் மானியம் வழங்க, அரசுக்கு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.அதில் வீடுகளுக்கான மானியம், 7,225 கோடி ரூபாயாகவும், விவசாய மானியம், 6,780 கோடி ரூபாயாகவும் உள்ளது.
கடந்த ஜூலை 1ம் தேதி முதல் அனைத்து பிரிவுகளுக்கும் மின் கட்டணம், 4.83 சதவீதம் உயர்த்தப்பட்டது. இதனால் யூனிட்டிற்கு, 20 காசு முதல்55 காசு வரை கட்டணம் உயர்ந்தது. இந்த கட்டண உயர்வால், அரசுக்கு மானிய செலவு அதிகரித்துள்ளது.
இதையடுத்து, நடப்பு நிதியாண்டிற்கு கூடுதலாக, ரூ.519.25 கோடி மானியம் வழங்க, அரசுக்கு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.