ராஜேந்திர பாலாஜி மீதான வழக்கில் 600 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்
ராஜேந்திர பாலாஜி மீதான வழக்கில் 600 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்
ADDED : ஏப் 17, 2025 01:01 AM
ஸ்ரீவில்லிபுத்துார்:ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான வழக்குகளில் இரு குற்றப்பத்திரிகைகளை நேற்று முன்தினம் இரவே ஆன்லைன் மூலம் இ பைலிங் முறையில் போலீசார் தாக்கல் செய்தனர்.
விருதுநகர் மாவட்டம் சாத்துாரை சேர்ந்தவர் ரவீந்திரன். இவரது சகோதரி மகனுக்கு ஆவினில் வேலை வாங்கி தருவதாக கூறி அ.தி.மு.க. நிர்வாகி விஜய நல்ல தம்பி ரூ. 30 லட்சம் வாங்கிவிட்டு, அதனை திருப்பி தராமல் ஏமாற்றியதாக 2021ல் விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் ரவீந்திரன் புகார் செய்தார். அதன்பேரில் விஜயதம்பி, முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, மாரியப்பன் ஆகிய 3 பேர் மீது ஒரு வழக்கும், ராஜேந்திர பாலாஜி தன்னிடம் பணம் வாங்கிவிட்டு ஏமாற்றி விட்டதாக விஜய நல்லதம்பி கொடுத்த புகாரில் ராஜேந்திர பாலாஜி, அவரது உதவியாளர்கள் பாபுராஜ், பலராமன், முத்துப்பாண்டி ஆகிய 4 பேர் மீது மற்றொரு வழக்கும் விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
தலைமறைவான ராஜேந்திர பாலாஜியை 2022 ஜனவரி 5ல் கர்நாடக மாநிலம் ஹாசனில் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
2023 ஜனவரியில் அப்போதைய குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ராதிகா, ஸ்ரீவில்லிபுத்துார் மக்கள் பிரதிநிதிகள் மீதான புகார்களை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகைகளை தாக்கல் செய்தார். ராஜேந்திர பாலாஜி மீதான புகாரினை ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி நீதிபதி வள்ளி மணாளன், கூறி, 2023 மார்ச் மாதம் உத்தரவிட்டார். அதன்படி ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் விரைந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வலியுறுத்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் ரவீந்தின் வழக்கு தொடர்ந்தார். குற்றப்பிரிவு போலீசார் உரிய நடவடிக்கை எடுக்காததால் வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனை எதிர்த்து ராஜேந்திர பாலாஜி, தமிழக அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. சி.பி.ஐ. விசாரணைக்கு தடை விதித்ததுடன் ராஜேந்திர பாலாஜியை விசாரணைக்கு உட்படுத்துவது தொடர்பாக தமிழக அரசு சமர்ப்பித்த கோப்பின் மீது கவர்னர் உடனடியாக முடிவெடுக்க வேண்டுமென உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில் தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அதில் ராஜேந்திர பாலாஜி மீது சட்ட நடவடிக்கை எடுக்க கவர்னர் அனுமதி வழங்கி இருப்பதால் அடுத்த ஓரிரு நாட்களில் அவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படுமென தெரிவித்திருந்தது.
இதனையடுத்து உடனடியாக விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் நேற்று முன் தினம் இரவு ஆன்லைன் மூலம் இ பைலிங் முறையில் ஸ்ரீவில்லிபுத்துார் மக்கள் பிரதிநிதிகள் மீதான புகார்களை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் 600 பக்கங்கள் கொண்ட 2 குற்றப்பத்திரிகைகளை தாக்கல் செய்தனர்.
விரைவில் நம்பர் இடப்பட்டு வழக்கு விசாரணைக்கு வருமென போலீசார் கூறினர்.