யோகாசனங்கள் செய்து நுாதன போராட்டம்; பகுதி நேர ஆசிரியர்கள் 600 பேர் கைது
யோகாசனங்கள் செய்து நுாதன போராட்டம்; பகுதி நேர ஆசிரியர்கள் 600 பேர் கைது
UPDATED : ஜன 21, 2026 11:58 AM
ADDED : ஜன 21, 2026 06:25 AM

சென்னை: சென்னையில், கோரிக்கைகளை வலியுறுத்தி யோகாசனங்கள் செய்து நுாதன போராட்டத்தில் ஈடுபட்ட பகுதி நேர ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர்.
பணி நிரந்தரம் கோரி, பகுதி நேர ஆசிரியர்கள், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக்கல்வித் துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு கடந்த 8ம் தேதி முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று 13வது நாளாக, 600க்கும் அதிகமான பகுதி நேர ஆசிரியர்கள், அரசின் கவனத்தை ஈர்க்க, யோகாசனங்கள் செய்தபடி நுாதன போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களைப் போலீசார் கைது செய்து, 10க்கும் மேற்பட்ட வாகனங்களில் ஏற்றிச் சென்று திருமண மண்டபங்களில் தங்க வைத்தனர்; மாலையில் விடுவித்தனர்.

தமிழக அரசு பள்ளிகளில் பணியாற்றும் பகுதி நேர ஆசிரியர்களுக்கு, பணி நீட்டிப்புக்கான அரசாணை வெளியிடப்படாத நிலையில், மார்ச் வரை ஊதியம் வழங்கும்படி, கருவூல அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
இடைநிலை ஆசிரியர்கள் கைது
தமிழக அரசு துவக்கப் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு, 'சம வேலைக்கு சம ஊதியம்' கோரி, இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் சார்பில், கடந்த டிச., 26 முதல் சென்னையில் போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து, கோட்டையை நோக்கி பேரணியாக சென்ற 1,200 பேரை போலீசார் கைது செய்தனர்.

